அழகான இளம் வயது கருணாநிதி.. இந்த போட்டோவில் நம்ம முதலமைச்சர் எங்கே? மற்றவர்கள் யார் யார் கண்டுபிடியுங்கள்.!!

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2021, 12:46 PM IST
Highlights

ஒவ்வொரு மேடையிலும் நேர் வகிடு எடுத்து சுருள் முடி துள்ள முழங்கும் கருணாநியின் மிடுக்கை பார்க்க இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக கலைஞர் கருணாநிதியும் நடிகர்களுக்கு இணையாக வலம் வந்தார்.  

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் இளவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது பிள்ளைகளுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கலைஞரைச் சுற்றி அரைகால் ட்ரவுசர் போட்டு அமர்ந்திருக்கும் அந்த சிறுவர்களில் இன்று தமிழகத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் அளவுக்கு, முதல்வராக உயர்ந்திருக்கும் மு.க ஸ்டாலினும் அதில் இடம்பெற்றுள்ளார் என்பதே அதற்கு காரணம்.  

தமிழக முன்னாள் முதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1924 ஜூன் 3 திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்குவளையில் முத்துவேல்-அஞ்சுகம் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் கருணாநிதி. கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி, நீதிக்கட்சியால் ஈர்க்கப்பட்டு, பெரியார்,அண்ணா அடிதொட்டு அரசியல் பாதையில் சமூகநீதி போர்க்களத்தில் சுழன்றடித்த கருணாநிதி, 1969ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார், தனது 94வது வயதில் 2018 ஆகஸ்ட் 7 அன்று வயது மூப்பின் காரணமாக மறைந்தார். 

பராசக்தி படத்தின் மூலம் புரட்சிகர வசனங்கள் எழுதி திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த கருணாநிதி, அரசியலில் தொடாத உயரங்கள் இல்லை, அதே நேரத்தில் அரசியலில் அவர் சந்திக்காத வீழ்ச்சியும் இல்லை. ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, ஒட்டுமொத்த  தமிழக அரசியலில் மைய புள்ளியாக அவர் இருந்தார். அவரை சுற்றியே அனைத்தும் நிகழ்ந்தன. அரசியல் களத்தில், மாநில உரிமைகளில், சமூக நீதி போர்களத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கங்கள் ஒவ்வொன்றும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. பெண்களுக்கு சொத்துரிமை, திருமணம் மற்றும் மறுமண உதவித் திட்டங்கள், கலப்புத் திருமணம் செய்வோர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, உள்ளிட்ட பல சமூக நீதி சீர்திருத்தங்களை செய்து காட்டியவர் கருணாநிதி.

அவர் நடத்திய போராட்டங்களுக்கு அளவே இல்லை, 14 வயதில் இந்திக்கு எதிராக முழங்கிய அவரது போர்க்குரல், அவர் மறைந்து கல்லறைக்கு செல்லும் வரை ஒலித்துக்கொண்டே இருந்தது. இட ஒதுக்கீடு போராட்டம், எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டம், மாநில சுயாட்சி உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டம் என அவரின் சமர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்று கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைரஸ் தொற்று பரவலாக உள்ள நிலையில் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் தமிழருக்கும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  அப்படிப்பட்ட கருணாநிதி எம்ஜிஆரைப் போன்றோ, சிவாஜி போன்றோ மிகப் பெரிய நடிகர் இல்லை, ஆனாலும் கூட, தன்பேச்சால், எழுத்தால், நடை, உடை பாவனைகளால், தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார் என்றால் மிகையல்ல. 

ஒவ்வொரு மேடையிலும் நேர் வகிடு எடுத்து சுருள் முடி துள்ள முழங்கும் கருணாநியின் மிடுக்கை பார்க்க இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக கலைஞர் கருணாநிதியும் நடிகர்களுக்கு இணையாக வலம் வந்தார். அவரைப்போலவே நேர் வகிடு எடுத்து, அவரைப்போலவே கரகர குரலில் பேசி திரியும் அளவிற்கு அன்று இளைஞர்கள் கருணாநிதி மீது இனம்புரியாத பித்துப் பிடித்திருந்தனர் என்றால் மறுப்பதற்கில்லை. ஈர்ப்பு மிகுந்த தலைவராகவும் தமிழக அரசியல் களத்தின் கதாநாயகனாகவும் இருந்த கருணாநிதி, தனது மகன் மகள் பிள்ளைகள் சகிதம் அமர்ந்திருக்கும் அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். அதில் அரைகால் ட்ரவுசர் போட்டு அமர்ந்திருக்கும் அந்த சிறுவர்களில் இன்று தமிழகத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் முதல்வராக உயர்ந்திருக்கும் மு.க ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளார். 

தூக்குமேடை என்ற நாடகத்தின் போது எம். ஆர் ராதா கலைஞர் என்ற பட்டத்தை அவருக்கு சூட்டினார். கடைசிவரை கலைஞர் என்பதை தனது அடையாளமாக்கிக் கொண்டது மட்டும் நிற்காமல், தமிழனுக்கொன்று ஓர் அடையாளத்தை எற்படுத்தி தந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, மூன்று முறை திருமணம் நடந்து, முதல் மனைவி பத்மாவதி அம்மாள் மறைவுக்குப் பிறகு தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாளுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு மு.க முத்து,  மு.க அழகிரி, மு.க ஸ்டாலின், மு.க தமிழரசு என்ற மகன்களும், செல்வி, கனிமொழி என்ற மகள்களும் உள்ளனர். என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!