இந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை!

By Asianet TamilFirst Published Oct 16, 2019, 9:36 PM IST
Highlights

சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நெற்றியில் பொட்டு வைக்கும் போது அதை உடனடியாகப் பகிரங்கமாக அழித்து இந்து மத உணர்வுகளை காயப்படுத்தினார். ஆனால், நாங்குநேரியில் கிறிஸ்தவர்கள் கொஞ்சம் கணிசமாக இருக்கிறார்கள் என்பதற்காக சர்ச்சில் பிரார்த்தனை செய்து வாக்கு கேட்கிறார்

இந்துக்களின் மத உணர்வுகளை தீண்டக் கூடாது என்றால் வாக்காள பெருமக்கள் இடைத்தேர்தலில்  இந்து விரோத தீயசக்திகளான காங்கிரஸ், திமுகவுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து ஹெச். ராஜா அடுத்தடுத்து ஆறு ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில்,  “திமுகழகம் தொடர்ந்து இந்து விரோதமாக செயல்படுவது என்பது தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பிளாட்டோ பற்றியெல்லாம் இருக்கிறபட்சத்தில் பகவத்கீதையை ஒரு பாடமாக வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் திமுக, இந்து மதம் தொடர்பான எந்த விஷயமாகஇருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்; அதற்கு பெயர் மதசார்பின்மை என்று நினைக்கிறார்கள். காரணம் இந்துக்கள் சரியாக எதிர்வினை செய்வது இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நெற்றியில் பொட்டு வைக்கும் போது அதை உடனடியாகப் பகிரங்கமாக அழித்து இந்து மத உணர்வுகளை காயப்படுத்தினார். ஆனால், நாங்குநேரியில் கிறிஸ்தவர்கள் கொஞ்சம் கணிசமாக இருக்கிறார்கள் என்பதற்காக சர்ச்சில் பிரார்த்தனை செய்து வாக்கு கேட்கிறார். அப்படியென்றால் கிறிஸ்தவ மதம் ஏற்புடையது, இந்து மதம் ஏற்புடையது இல்லையா?
இந்த மாதிரியாக செயல்படுகிற வடிகட்டிய இந்து விரோத தீயசக்தியான திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். “மாரியம்மன் கோயிலுக்கு சென்று பால் குடம் எடுத்தால்தான் நாங்கள் ஓட்டு போடுவோம் என்று இந்துக்கள் சொன்னால், கருணாநிதியே பால்குடம் எடுப்பார்”என்று ஒருமுறை துக்ளக் ஆசிரியர் மறைந்த சோ தெளிவாக சொல்லி இருக்கிறார். இவர்களின் நோக்கம் தேர்தலில் வாக்கு, வெற்றி மட்டும்தான்.


பகவத் கீதையையையும் கண்ணபிரானையும் இழிவாகப் பேசிவிட்டு சர்ச்க்கு போய் தேர்தல் நேரத்தில் பிரார்த்தனை செய்து ஓட்டு கேட்பதுதான் மதசார்பின்மையா? இது தேர்தல் விதிமுறை மீறிய செயல். தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஸ்டாலினுடைய இந்த நிகழ்ச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இனிமேல் இந்துக்களின் மத உணர்வுகளை தீண்டக் கூடாது என்றால் வாக்காள பெருமக்கள் இடைத்தேர்தலில்  இந்த மாதிரியான இந்து விரோத தீயசக்திகளான காங்கிரஸ், திமுகவுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.” என்று ஹெச். ராஜா ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். 

click me!