ரொம்ப சீன் போடாதீங்க.. டி.ஆர்.பாலுவும் தயாநிதி மாறனும் மன்னிப்பு கேட்கணும்.. திமுகவை பங்கம் செய்த ஹெச்.ராஜா!

By Asianet TamilFirst Published May 16, 2020, 8:17 AM IST
Highlights

டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதிமாறன் எங்களை முதன்மைச் செயலாளர் மரியாதை குறைவாக நடத்தினார். அதற்கு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்றும் கூறியுள்ளனர். இது டி.ஆர்.பாலு மற்றும் மாறனின் ஆதிக்க ஆணவப் போக்கை எடுத்துக் காட்டுகிறது. ஈ.வெ.ரா காலம் முதல் தி.க, தி.மு.க பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான அமைப்புகளாகவே செயல்பட்டுள்ளது.

தங்களது நடவடிக்கை மற்றும் பேச்சுக்காக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி ஆகியோர் தலைமை செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து வழங்கினார்கள். இந்தச் சந்திப்பின் போது தமிழக தலைமைச் செயலாளர் எங்களை அவமானப்படுத்தும்விதமாக நடந்துகொண்டார் என்று திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். அவருடைய அறையில் தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை அலறவிட்டு சத்தத்தை கூட குறைக்க விடாமல் எங்களை அவமானப்படுத்தினார் என்று டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.


தலைமைச் செயலாளர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்னை கொண்டுவருவோம் என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு எச்சரித்தார். திமுக எம்.பி.களின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தலைமை செயலாளர் சண்முகம், திமுக தலைவர் மீதும் மதிப்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, சண்முகம் ஆகியோர் பேட்டிகள், அறிக்கைகள் மூலம் பேசிய நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை விமர்சித்து ‘தலைக்கணம் செயலாளர்’ என்ற பெயரில் கட்டுரை எழுதப்பட்டது.


இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமைதி காத்த அதிமுக நேற்று ஜெயக்குமார் மூலம் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே தற்போது பாஜக  தலைவர்களும் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு ஆதரவாகக் குதித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுகவை விமர்சனம் செய்துள்ளார். அவருடைய அறிக்கையில், “13.05.2020 அன்று முதன்மைச் செயலாளரை சந்திக்க சென்ற தி.மு.க தலைவர்கள் டி.ஆர். பாலு மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் மக்கள் பிரச்சனைக்காக சந்தித்ததாகத் தெரியவில்லை. விளம்பரத்திற்காக சந்தித்தாகவே நினைக்கிறேன்.
உண்மையிலேயே இவர்கள் கூற்றுப்படி 1 லட்சம் மனுக்கள் இருக்குமானால் அவை அனைத்தையும் பிரித்து உரிய இலாக்காக்களுக்கு அனுப்ப அவகாசம் தேவைப்படும். ஆனால், அதற்கு காலக்கெடு கேட்டு வாதிட்டதும் அந்த மனுக்களின் கட்டுக்களை பல நபர்களோடு எடுத்துச் சென்று அதை புகைப்படம் எடுத்தது போன்றவை திமுகவினரின் மலிவுப் பிரசார யுக்தியாகவே தெரிகிறது. திமுகவின் ஒன்றிணைவோம் வா முகநூல் பக்கத்தில் லைக் செய்து தொடரவும் என்றுள்ள பக்கத்தில் சென்று பார்த்தாலே அதில் 80 சதவீதம் பேர் பீகாரைச் (பிரசாந்த் கிஷோர் உபயமோ) சேர்ந்தவராக இருப்பதை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியுள்ளேன். நோய் தொற்று சமயத்தில் சீன் போட நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதிமாறன் எங்களை முதன்மைச் செயலாளர் மரியாதை குறைவாக நடத்தினார். அதற்கு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்றும் கூறியுள்ளனர். இது டி.ஆர்.பாலு மற்றும் மாறனின் ஆதிக்க ஆணவப் போக்கை எடுத்துக் காட்டுகிறது. ஈ.வெ.ரா காலம் முதல் தி.க, தி.மு.க பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான அமைப்புகளாகவே செயல்பட்டுள்ளது. ஏனெனில் மதுரையில் பட்டியல் சமுதாய மக்களின் ஆலயப் பிரவேசத்தை ஈ.வெ.ரா எதிர்த்தது உலகறிந்த விஷயம். திமுகவின் சமூக நீதி பேச்சு வெறும் உதட்டவிளானது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. தி.மு.கவின் இந்த பட்டியல் சமுதாய மக்களை இழிவு படுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். தங்களது நடவடிக்கை மற்றும் பேச்சிற்கு டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று அறிக்கையில் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

click me!