தமிழகத்தில் பிளஸ்2தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனி நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மருத்துவ,பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அது வரும் கல்வியாண்டிலேயே அமலாக்கப்படவேண்டும் என்றும் அறிவித்தது
இதையடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகமே நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள் நீட் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் , நீட் தேர்வை எழுத தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
வைகோ, சீமான் போன்றவர்கள் மத்திய அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்களை கண்மூடித் தனமாக எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார்.
இவர்களது பேச்சை தமிழக மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார்.