
ஜெயலலிதா எப்போது இறப்பார். எப்போது முதல்வர் ஆகலாம் என ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்தார் என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
இதுகுறித்து தம்பிதுரை, சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது:-
சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று தேர்தல் கமிஷனிடம், ஓ.பன்னீர்செல்வம் புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை அனுப்பிய பன்னீர் செல்வம்,அப்போது கட்சியின் பொருளாளராக இருந்தார்; மதுசூதனன், அவைத்தலைவராக இருந்தார்.
பொதுக்குழுவை முறைப்படி கூட்டி, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தான், பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பான ஆவணத்தில்,பன்னீரும், மதுசூதனனும் கையெழுத்திட்டுள்ளனர்.
இப்போது, திடீரென, பொதுச் செயலாளரை தேர்வு செய்தது தவறு என்று சொன்னால், அதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக இப்போது பன்னீர் செல்வம் கூறுகிறார்.
தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் இறந்தபோது, நெடுஞ்செழியன் தான், இரு முறையும் தற்காலிக முதல்வராக பதவி வகித்தார். அதன் பின்பே சட்டசபையை கூட்டி, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால், ஜெயலலிதா இருந்தபோதே, ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கி, முதல்வராக பதவி ஏற்றார். இப்போது, தன்னை மிரட்டி பதவியை ராஜினாமா செய்ய வைத்தாக கூறுகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு முன்னதாகவே எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி அவர் முதல்வர் ஆனார். இவரை மிரட்டினார்களா அல்லது இவர் எம்எல்ஏக்களை மிரட்டினாரா என்ற சந்தேகமும் மர்மமும் எங்களுக்கு இருக்கிறது. அப்படியானால், ஜெயலலிதா எப்போது இறந்துபோவார் என ஓ.பி.எஸ். காத்திருந்துள்ளார்.
ஜெயல்லிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இப்போது கூறும், ஓ.பன்னீர்செல்வம், அனைத்து முக்கிய இலாக்காக்கள் தன்னிடம் இருந்தும் அவரை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துசெல்ல யார் மறுத்தது, முழு அதிகாரம் இருந்தும் இவர் ஏன் முன்வரவில்லை. இந்த கேள்விகளுக்கு ஒ.பன்னீர்செல்வம் பதிலளிக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.