
மோடியின் புத்தகம் வெளியீடு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுதிய தேர்வு வீரர்கள் " Exam Warriors " புத்தகத்தின் தமிழாக்கத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை வெளியிட அதன் முதல் பிரதியை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி பெற்றுக்கொண்டார். முன்னதாக, இந்தியில் பள்ளி குழந்தைகள் தேர்வுக்கு எப்படி பயமின்றி தயார் ஆகலாம் என்பது குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தேர்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வில் வளர்ச்சிக்கு உதவும் இந்த புத்தகம். நம் பிரதமர் வித்தியாசமான மனிதர். கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து அனைத்து விதமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். பாதுகாப்பாக வளர்ந்து வரவில்லை என குறிப்பிட்டார்.
மாணவர்கள் பங்கு முக்கியம்
நம் பாரத நாடு பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறி உள்ளது. இந்தியா எப்படி யாரால் ஆளப்படுகிறது, என்னாலோ என்னை போல் பதவியில் இருப்பவர்களாலோ இல்லை. உங்களை போன்ற மாணவர்கள் இளைஞர்களால் தான். நீங்கள் பாறை போன்றவர்கள் உங்களுக்குள் அழகான வைரம் உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் கரடுமுரடாக தான் இருக்கும். ஒருமுறை அது வெளிப்பட்டால் அதன் மதிப்பு தெரியும். நீங்கள் சிறந்த மருத்துவர், ஆராய்ச்சியாளர் என வரப்போகிறவர்கள்.
தேர்வு மட்டும் இறுதி இல்லை
தேர்வு பயத்தில் பதற்றம், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயல்கிறார்கள். தேர்வை மட்டுமல்ல வாழ்க்கையையும் எப்படி எதிர்கொள்வது என்று இந்த புத்தகம் உங்களுக்கு உதவும். எளிய டிப்ஸ் இந்த புத்தகம் கொடுக்கிறது. சிலர் இதில் சிலவற்றை பின்பற்றி கூட இருக்கலாம். என் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் நான் கூறுவது நீங்கள் தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள் , அது கடினமாக இருந்தால் அதிகம் புன்னகை செய்யுங்கள். இது என் யு.பி.எஸ்.சி.(UPSC) தேர்வில் எனக்கு உதவியது.
தகுதி வளருங்கள்-நாட்டுக்கு இழப்பு
ஆலமரம் விதை கடுகு போல சிறியதாக இருக்கும். நீங்கள் அந்த விதை போல சிறியதாக இருந்தாலும் ஆலமரம் போல வளர வேண்டும் அதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு உதவும். நீங்கள் உங்களின் தகுதியை உணர்ந்து வளர்ந்து வரவில்லை என்றால் அது உங்களுக்கும் இழப்பு, உங்கள் பெற்றோருக்கும் இழப்பு, இந்த நாட்டுக்கும் இழப்பு என்றார்.