
விருதுநகர்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் செய்தியாளர்களை அழைத்து தன்னிலை விளக்கம் அளித்த ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றார் என்பது குறித்த அவரது உரையாடல் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.
நிர்மலாதேவியை காவலாளர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநில அரசு ஒரு விசாரணையை மேற்கொள்கிறது. ஆளுநர் ஒரு விசாரணையை மேற்கொள்கிறார்.
இரண்டு விசாரணையும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து ஆளுநர் ஒரு விசாரணையை மேற்கொள்கிறார். மாநில அரசு காவல்துறை மூலமாக விசாரணையை மேற்கொள்கிறது.
ஆளுநர் அவசர, அவசரமாக ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏன் ஏற்பட்டது? செய்தியாளர்களை அழைத்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பக்கூடிய கேள்விகள் ஆகும்.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் உண்மையில் விடை காண வேண்டும். இதில் அந்த பேராசிரியை மட்டும் குற்றவாளி அல்ல. ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். பதவி அல்லது பணத்துக்கு கூட ஆசைப்பட்டு இருக்கலாம்.
அவரை இந்த செயலை செய்ய வற்புறுத்தியது யார் தூண்டியது யார் அந்த பெரிய மனிதர்கள் யார் என்பதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய முக்கிய கேள்வி ஆகும்.
உண்மை வெளிவர வேண்டும் என்றால் பணியில் இருக்கிற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு ஒரு முழு விசாரணை நடத்த வேண்டும்.
ஆளுநர் அவரது பதவிக்கு உரிய கௌரவத்தை காப்பாற்ற, உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை திரும்ப பெற வேண்டும்" என்று அவர் கூறினார்.