நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்க கூடாது என ஓ.பி.எஸ்சும் ஸ்டாலினும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றது. திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்களால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். திமுக உறுப்பினர்களை வெளியேற்றியதைக் கண்டித்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்துப் பேசினார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது, மைத்ரேயன், பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கியதாகத் தெரிகிறது. ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரியதை சபாநாயகர் நிராகரித்து விட்டதாகவும், நேற்றைய வாக்கெடுப்பை அங்கீகரிக்க வேண்டாம் என்றும் ஆளுநரை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.