ஜி.கே.மணி கவுரவத் தலைவர்..! அன்புமணி ரியல் தலைவர்..! பாமக டாப் லெவல் மாற்றம்..!

By Selva KathirFirst Published Jul 20, 2021, 11:51 AM IST
Highlights

அய்யா வழியில் தொண்டர்களை வழி நடத்த உள்ளதாக அன்புமணி கூறியிருந்தார். அப்போது பாமகவில் விரைவில் அன்புமணிக்கு உயர் பதவி தேடி வர உள்ளதாக செய்திகள் வெளியாகின.

பாமக தலைவர் பதவியில் விரைவில் மாற்றம் வரும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாமக தலைவராக தற்போது ஜி.கே.மணி இருந்து வருகிறார். ஆனால் அதிகாரங்கள் முழுமையாக பாமக நிறுவனர் ராமதாஸ் வசம் உள்ளது. அன்புமணி ராமதாஸ் பாமக இளைஞர் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் பாமக அண்மையில் 34வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடியது. அப்போது அய்யா வழியில் தொண்டர்களை வழி நடத்த உள்ளதாக அன்புமணி கூறியிருந்தார். அப்போது பாமகவில் விரைவில் அன்புமணிக்கு உயர் பதவி தேடி வர உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பாமக தலைவர் மாற்றம் தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாக கூறுகிறார்கள்.

பாமக தலைவராக இருக்கும் ஜி.கே.மணி விரைவில் அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து அவருக்கு பாமகவின் கவுரவத் தலைவர் எனும் புதிய பதவி வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். அதே சமயம் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக நியமிக்கப்படுவார் என்கிறார்கள். இது தொடர்பான ஆலோசனை முடிந்த நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனிடையே தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் கட்சியில் முக்கியமான சில மாற்றங்களை அன்புமணி சத்தமில்லாமல் செய்து முடித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

அதாவது முக்கியமாக சமூக வலைதளப் பிரச்சாரங்கள் மற்றும் ஊடக விவாதங்களில் இனி கூடுதல் கவனம் செலுத்த அன்புமணி முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். அதன் அடிப்படையில் புதிய டீமை அவர் தயார் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள். இதே போல் கட்சி நிர்வாகிகள் மாற்றத்திலும் அதிரடி இருக்கும் என்கிறார்கள். சமூக வலைதளங்களில் பாமகவிற்கு ஆதரவாக தீவிரமாக செயல்படுபவர்களுக்கு முக்கிய பொறுப்பு தேடி வரும் என்கிறார்கள். இதே போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வழக்கத்தை விட புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள்.

தற்போதைய சூழலில் அரசியல் களத்தில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இயங்கி வருகிறார். இதே போல் பாஜகவின் அண்ணா மலை களம் இறங்கியுள்ளார். சீமான் வேகம் தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. கமலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் இவர்களின் போட்டியை சமாளித்து திமுக, அதிமுகவிற்கு சவால் கொடுக்க பாமக கட்டாயம் தலைமை மாற்றம் செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் தான் அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த தொண்டர்களை உற்சாகப்படுத்த அன்புமணிக்கு புதிய பதவி கொடுப்பதன் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

click me!