உங்கள் கைப்பேசியில் பொது பட்ஜெட் . சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக மத்திய அரசு செய்த டிஜிட்டல் புரட்சி.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2021, 2:55 PM IST
Highlights

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், முழுக்க முழுக்க பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. எனவே சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக பட்ஜெட் காகிதத்தில் அச்சிடப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.  

வரும் 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அனைத்தையும் பொதுமக்கள் கைபேசியிலேயே பார்த்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக " யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் " என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  இதனால் பொதுமக்கள் தங்கள் செல்போன்களிலேயே பட்ஜெட் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள முடியும். 

2021 மட்டும் 2022 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் செஷனில் முதல் பகுதி ஜனவரி 29-ஆம்  தேதி தொடங்க உள்ள நிலையில் அது பிப்ரவரி 12ஆம் தேதி நிறைவுறுகிறது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15 வரையில் முதல் பகுதியும்,  மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாவது பகுதியாகவும் கூட்டம் நடைபெறு உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனவரி 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் - (மாநிலங்களவை மற்றும் மக்களவை) உரையாற்றுவார். 

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பட்ஜெட் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இது அமைய  வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், 

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், முழுக்க முழுக்க பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. எனவே சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக பட்ஜெட் காகிதத்தில் அச்சிடப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் எளிதாக பட்ஜெட் மற்றும் அது  தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதில் அனைத்து வகையான ஆவணங்களும், மின்னணு வடிவத்தில் பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த மொபைல் பயன்பாட்டில் பட்ஜெட் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இடம்பெற உள்ளது. அதாவது, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மாநிலங்களுக்கான தேவை,  நிதி மசோதா போன்ற தகவல்கள் அதில் இடம் பெற உள்ளது. அது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வசதி கொண்ட  கைப்பேசிகளின் மூலம் இதை பெற முடியும். அதாவது இந்த மொபைல் பயன்பாட்டை யூனியன் பட்ஜெட் வலை இணையதளமான www.indiabudget.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை முடிவடைந்ததும் இந்த  செயலியல் பட்ஜெட் ஆவணங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.  

 

click me!