கலப்பட பால் விவகாரம் - முன்னாள் அமைச்சர் ரமணாவும் களத்தில் குதித்தார்!

First Published Jun 29, 2017, 10:21 AM IST
Highlights
former minister ramana against rajendra balaji


கலப்பட பால் விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் வைகை செல்வனும் தரை டிக்கெட் ரேஞ்சுக்கு முட்டி மோதி வரும் நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக கருத்துத் தெரிவித்து முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ரமணாவும் களத்தில் குதித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனுக்கும் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதை அடுத்து பாலில் கலப்படம் இல்லை என ஆய்வில் கூறப்பட்டது. 

இதனையடுத்து வைகைச்செல்வன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இதனால் கோபமடைந்த அமைச்சர் வைகைச்செல்வனை காசு கொடுத்தால் யாருக்காகவும் பேசும் கூலிப்பேச்சாளர் என விமர்சித்தார். 
இதற்கு ராஜேந்திர பாலாஜியை தெருத்தெருவாய் சினிமா போஸ்டர் ஒட்டியவர் என வைகை செல்வன், தனிப்பட்ட விமர்சனம் செய்ய துவங்கினார்.
 
இதற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, வைகைச்செல்வன் ஒரு லூசு, சீக்கு வந்த பிராய்லர் கோழி, அழுகிப்போன தக்காளி, குழம்புக்கு ஆகாது என தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கி கட்டி உருளத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாலில் கலப்படம் செய்த நிறுவனங்கள் மீது விரைவில் நடவக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இதனிடையே முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ரமணா இப்பிரச்சனையில் திடீரென களத்தில் குதித்துள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் ராஜேந்திர பாலாஜிக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – வைகை செல்வன் இடையே தெருச் சண்டை அளவுக்கு கீழ்நோக்கிப் போய் அதிமுகவின் மானம் கப்பலேறி வரும் நிலையில் தற்போது ரமணாவும் இப்பிரச்சனையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

click me!