
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசு வேலை வாங்கி மோசடி செய்தது மட்டும் அல்லாமல், கொலை முயற்சி குற்றச்சாட்டும் இருப்பதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வேலைக்காக பணம் வாங்கியது தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 11 பேர் மோசடிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக மோசடி மட்டுமல்லாமல், ராஜவர்மன் என்பவரை கொலை செய்யவும் முன்னாள் அமைச்சர் திட்டமிட்டது இந்த வழக்கு தொடர்பான புகார்களில் இருந்து தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இரு வழக்கிலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர்களான விஜயநல்லதம்பி மற்றும் ரவீந்திரன் தரப்பில், ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தனர். ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி புகார் அளித்த விஜய் நல்லத்தம்பியின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். காவல்துறை உரிய நோட்டீஸ் வழங்காமல், கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த விஜய நல்லதம்பியை அரசுத்தரப்பு பயன்படுத்தி வருவதாகவும், அவர் அனைத்து கட்சிகளிலும் அங்கம் வகித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதி, புலன் விசாரணையை தொடரலாம் எனவும், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட்டு, முன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.