எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு? வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய அதிமுக முன்னாள் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Oct 31, 2021, 8:30 PM IST
Highlights

 கடன் தொல்லையால் நாங்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டால், அதற்கு சரோஜாவும், அவர் கணவரும், அவரின் மருமகன் ராஜவர்மனும்தான் காரணம். எனவே, முன்னாள் அமைச்சரிடமிருந்து எனக்கு வரவேண்டிய ரூ.76,50,000 ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குணசீலன் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அரசு பணி வாங்கித் தருவதாக ரூ.76,50 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் முன்ஜாமீன் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில்  அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் சங்ககிரிபகுதியை சேர்ந்தவர் டாக்டர் சரோஜா. அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை  தேர்தலில் மீண்டும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அமைச்சராக இருந்த போதே  சரோஜா மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருந்து வந்தன. 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, ராசிபுரத்தைச் சேர்ந்த சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். தில், அமைச்சர் சரோஜா, 'நீங்கள் சத்துணவு வேலைக்குப் பணம் வாங்குங்கள். நான் தொகுதியில் வீடுகட்ட வேண்டும்' என்று என்னையும் என் மனைவியையும் அழைத்துச் சொன்னார். அதன்பிறகு, என் மனைவி மூலம், 15 நபர்களிடமிருந்து ரூ.76,50,000 பெற்று, சரோஜாவிடமும் அவர் கணவர் லோகரஞ்சனிடமும் இரண்டு தவணைகளாக மொத்தப் பணத்தையும் கொடுத்தேன். அந்தப் பணத்தை வைத்துத்தான், தற்போது லோகரஞ்சன் ராசிபுரத்தில் ஒரு வீட்டை கிரையம் செய்திருக்கிறார். எங்களிடம் பணம் கொடுத்தவர்களின் விவரங்களையும் இந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்ட சரோஜா, அவர் கணவர் லோகரஞ்சன், அதற்குப் பிறகு திட்டமிட்டு எங்களைத் தவிர்த்தனர். இது தொடர்பாக, இரண்டு முறை முன்னாள் அமைச்சரை நேரில் சந்திக்க முயன்றேன் ஆனால், முடியவில்லை. அப்போது தொடர்ந்து பேச முயன்றபோதுதான், 'உன்னைத் தொலைத்துவிடுவேன். நான் அமைச்சராக இருந்தவள். என்னை மீறி உன்னால் என்ன செய்ய முடியும்?' என்று அவர் கணவருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தார்.

இந்தத் தொகையைக் கேட்டு சில பேர் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். மேலும், `நாங்கள் முன்னாள் அமைச்சரிடம் கொடுக்கவில்லை. உங்களிடம்தான் கொடுத்தோம். எனவே, உங்கள்மீது காவல்துறையிடம் புகார் கொடுப்போம்' என்றும் மிரட்டுகிறார்கள். அவர்களுக்காகச் சில இடங்களில் பணம் வாங்கி திருப்பிக் கொடுத்திருக்கிறேன். கடன் தொல்லையால் நாங்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டால், அதற்கு சரோஜாவும், அவர் கணவரும், அவரின் மருமகன் ராஜவர்மனும்தான் காரணம். எனவே, முன்னாள் அமைச்சரிடமிருந்து எனக்கு வரவேண்டிய ரூ.76,50,000 ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குணசீலன் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குணசீலன் அளித்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால், அந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

click me!