இன்னும் எத்தனை வருஷத்துக்கு ஏமாற்ற போறீங்க.. ஸ்டாலினுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்த ராமதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2022, 1:09 PM IST
Highlights

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுகவும், திமுகவும் அறிவித்த போதிலும் அது செயல்வடிவம் பெறவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்ட  2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பலர் ஓய்வூதியம் கிடைக்காததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். 

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.  இராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் 2022-23 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்த்துள்ள நிலையில் ராமதாஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் 01.01.2004 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப் படுத்தியது. இத்திட்டத்தை பெரும்பான்மையான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன. மத்திய அரசுக்கு முன்பே தமிழ்நாட்டில் 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. திரிபுரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் தான் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருந்தது. காலப்போக்கில் அங்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது. மாறாக, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப் படும். இது பயனற்றது என்பதால் பழைய ஓய்வூதியத்துக்கு மாற அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் புதிய ஓய்வூதிய முறைக்கு மாறிவிட்ட நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று பலரும் கூறி வந்த நிலையில், அது சாத்தியம் தான் என்று இராஜஸ்தான் அரசு நிரூபித்துகாட்டியிருக்கிறது. அதனால் இராஜஸ்தான் அரசு பணிகளில் 2004-ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்நிலையில் இதை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இந்த அரசு அதை செய்யும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது, இதனால் இந்த கோரிக்கை முன்பை காட்டிலும் தற்போது வேகமாக எழுந்து வருகிறது. 

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 2004-ஆம் ஆண்டிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று இராஜஸ்தான் அரசு நிரூபித்து விட்ட நிலையில், தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். என்றும் இதுதொடர்பாக 2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அடுத்த மாதத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில்  2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுகவும், திமுகவும் அறிவித்த போதிலும் அது செயல்வடிவம் பெறவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்ட  2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பலர் ஓய்வூதியம் கிடைக்காததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இனியும் அரசு ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் மற்ற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஒளியை ராஜஸ்தான் அரசு ஏற்றியுள்ளது. இராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், 2004-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி  மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். 

இதன்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெயரை இராஜஸ்தான் பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் அல்லாடி வரும் நிலையில் ராமதாசின் இந்த கோரிக்கை திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. 
 

click me!