பிரதமர் கனவில் மிதக்கும் ஸ்டாலின்.. இந்தி எதிர்ப்பை அடக்கி வாசிக்க சொன்ன PK.. டெல்லி ராஜகோபாலன் பகீர்.

Published : Feb 24, 2022, 12:12 PM IST
பிரதமர் கனவில் மிதக்கும் ஸ்டாலின்.. இந்தி எதிர்ப்பை அடக்கி வாசிக்க சொன்ன PK.. டெல்லி ராஜகோபாலன் பகீர்.

சுருக்கம்

தேர்தலில்கூட ஸ்டாலினின் இணையவழி பிரச்சாரத்திற்கு திட்டம் போட்டு கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்தான் எனக் கூறியுள்ளார். அதேபோல் தேசிய அளவில் ஸ்டாலினை முக்கிய ஆளுமையாக உருவாக்கும் திட்டமும் பிரசாந்த் கிஷோர் செய்யவுள்ளார்,

பிரதமர் கனவில் மிதக்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், இந்தி எதிர்ப்பு விஷயத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என அரசியல் வியூககர் பிரசாந்த் கிஷோர் அறியுறுத்தியுள்ளதாக டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகத்தான் ஸ்டாலின் சமீபகாலமாக இந்தி எதிர்ப்பு குறித்து வாய் திறப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுகவின் வரலாற்று பக்கங்கள் போராட்டங்களாலும் லட்சக் கணக்கான தொண்டர்களில் தியாகத்தாலும் எழுதப்பட்டதாகும், அதில் ஆகச்சிறந்த போராட்டமாக இந்தி எதிர்ப்பு போராட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. 1960ஆம் ஆண்டு முதலே இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை திமுக முன்னெடுத்தது, ரயில் நிலையம், பொது இடம் என அனைத்திலும் இந்தி எழுத்துக்கள் அடிக்கப்பட்டது, பலர் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர், தமிழகத்தின் வீதிகளில் அன்று ஆக்ரோசமாக நடந்த போராட்டம்தான் ஹிந்தி மொழி இன்றளவும் தமிழகத்தின் பக்கம் தலை வைத்து படுக்க தயங்க காரணம். இன்றளவும் இருமொழிக் கொள்கை,  ஹிந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அச்சாணியாக இருந்து வருகிறது. ஆனாலும் காங்கிரஸ் பாஜக மாறி மாறி எப்படியாவது தமிழகத்தில் இந்தி மொழியை புகுத்தி விடலாம் என  முயற்சிக்கும்  ஒவ்வொரு தருணத்திலும், வலுவான எதிர்ப்பு காட்டி அதை முடக்கும் பணியை திமுக சரியாக செய்து வருகிறது. இப்படி கொள்கை உறுதி, தமிழர்கள் உரிமையில் சமசரமற்ற போர்குணம் போன்றவைதான் திமுக மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு முக்கிய காரணம். 

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  ஆட்சியை இழந்து நின்ற திமுக, எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கொள்கை பேசி வளர்ந்த திமுகவுக்கே வியூகம் வகுத்துக் கொடுக்கும் சாரதியாக வந்து சேர்ந்தார் பிரசாந்த் கிஷோர். அரசியல் சதுரங்கத்தில் சாணக்கியன்,  தேர்தல் ராஜ தந்திரி என பல வகையிலும் புகழப்படுபவர் தான் இந்த பிரசாந்த் கிஷோர், பஞ்சாப், டெல்லி, ஆந்திரா என்று பல மாநிலங்களில் இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்தவர் இவர்தான். 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி வெற்றி பெற்ற போது அந்த அலை உருவாக பின்னணியிலிருந்து பிரசார வியூகம் வகுத்து கொடுத்தவரும் இவர்தான் என்று சொல்லப்படுகிறது.  பீகார் மாநிலத்தில் பிறந்த இவர், ஐநா சபையில் 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பி அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை செய்யும் பணியைத் தொடங்கினார்.

2012ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் வெற்றிக்காக  பிரச்சாரத்திற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த். சமூக வலைதள பிரச்சாரம், கவர்ச்சி அறிவிப்புகள் என புதுமையான ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவராக அறியப்பட்டார். குஜராத் மாநில முதல்வராக மூன்று முறை மோடி வெற்றி பெற காரணமாக இருந்தவர் இவர்தான். பிரதமர் மோடியுடன் அதிக நெருக்கம் பாராட்டியவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்  மோடி பிரதமராவதற்கு பிரச்சாரங்களை செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. 

அதுமுதல் அரசியல் உலகில் பி.கே என பிரபலமானார் பிரசாந்த் கிஷோர். ஐபேக் என்ற நிறுவனத்தை உருவாக்கி, அரசியல் கட்சிகளுக்கும், தனிநபர்களுக்கு, தேர்தல் வியூகங்களை வழங்கும் பணியை செய்து வருகிறார் பிரசாந்த், அதைத்தொடர்ந்து 2015ல் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் வெற்றிக்கு உதவினார். 2016 இல் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸின் வெற்றிக்காக பணியாற்றினார், 2019 ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வியூகம் அமைத்து கொடுத்தார் பிரசாந்த் கிஷோர்.

2017இல் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பணியாற்றினார். ஆனால் அங்கு இவரது வியூகம் எடுபடவில்லை, அதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வியூகம் அமைக்கும் பணியில் இறங்கினார் பிரஷாந்த், பல அரசியல் கட்சிகள் தங்களுக்கு வியூகம் அமைக்க வேண்டும் என பிரசாந்தை நாடின, ஆனால் அவர் திமுகவை தேர்ந்தெடுத்துக் கொண்டார். திமுகவிடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு வியூகம் அமைத்து கொடுத்தார், இந்தி எதிர்ப்பு போராட்டம், மொழி உணர்வு,  மாநில சுயாட்சி என அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பேசி வளர்த்த திமுகவை, ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரிடம்  அடமானம் வைத்து விட்டார் என திமுகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தன் மீது நம்பிக்கை இல்லாத ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரிடம் கோடிகளை கொட்டிக் கொடுக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தது. சுயமாக சிந்திக்க தெரியாதவர் ஸ்டாலின் என்ற பலர் விமர்சித்தனர். ஆனால் நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்தபடியே திமுக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றது. பிரசாந்த் கிஷோரின் புகழ் உயர்ந்தது.

இந்நிலையில்  தனது திட்டங்களின் மூலமாக, செயல்பாடுகள் மூலமாக தென்னிந்தியாவில் அதி செல்வாக்கு மிகுந்த முதல்வராக அறியப்படுகிறார் ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஐந்து குடியரசுத் தலைவர்களின் நியமிக்க காரணமாக இருந்தவர், இரு தேசிய கட்சிகளும் மத்தியில் ஆட்சி செய்ய உறுதுணையாக இருந்தவர், தேசிய அரசியலில் சாணக்கியர் என இன்றவும் புகழப்படுகிறார், அவரைப் போல முதல்வர் ஸ்டாலினும் தேசிய அரசியலில் களமிறங்க வேண்டும்,  பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைத்து  பிரதமராக வேண்டுமென திமுகவினரும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் மேடைதோறும் பேசி வருகின்றன. முதல்வர்  ஸ்டாலினுக்கும் அந்த ஆசை மிகுதியாகவே இருப்பதாக தெரிகிறது.  இதற்கும் பிரசாந்த் கிஷோரையே பயன்படுத்த திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான பிரச்சாரம் வியூகம் அமைத்து, மோடியை பிரசாந்த் எப்படி பிரதமராக்கினாரோ அதுபோலவே தன்னையும் அவர் பிரதமர் ஆக்குவார் என்ற நம்பிக்கை ஸ்டாலினிடம் அதீதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு  திமுகவுடன் தொடர்பில் இருந்து 50 சதவீதம் பிரசாந்த் விலகிவிட்டார்,  ஆனால் அவரின் தொடர்பு முற்றிலும் அறுந்துவிடவில்லை,  நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில்கூட ஸ்டாலினின் இணையவழி பிரச்சாரத்திற்கு திட்டம் போட்டு கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்தான் எனக் கூறியுள்ளார். அதேபோல் தேசிய அளவில் ஸ்டாலினை முக்கிய ஆளுமையாக உருவாக்கும் திட்டமும் பிரசாந்த் கிஷோர் செய்யவுள்ளார், பிரதமர் கனவில் மிதக்கும் ஸ்டாலினிடம் இனி இந்தி எதிர்ப்பு  விஷயத்தை அடக்கி வாசிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனால்தான் சமீப காலமாக ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு குறித்து வாய் திறக்காமல் இருப்பதாகவும் ராஜகோபாலன் கூறியுள்ளார். இந்தி எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை,  மாநில சுயாட்சி திமுகவின் அடிநாதமாக இருந்து வரும் நிலையில் ஆனால் பிரதமர் கனவிற்காக மு.க ஸ்டாலின் அதில் சமரசம் செய்துகொண்டார் என்ற இந்த மூத்த பத்திரிக்கையாளரில் இந்த தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!