கொரோனா அச்சத்தால் வாக்குப்பதிவு குறையும் அபாயம்.. தேர்தல் ஆணையத்திற்கு ஆசிரியர்கள் பலே ஆலோசனை..

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2021, 11:52 AM IST
Highlights

மேலும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் வாக்குப்பதிவு முன் நாளே பணிக்குச்சென்று மறுநாள் இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும்வரை பணியில் உள்ளதால் தேர்தல் ஆணையமே உணவு ஏற்பாடு செய்யவேண்டும்.  

கொரோனா அச்சத்தால் வாக்குப்பதிவு குறையும் அபாயம்  உள்ளதால், கொரோனா தொற்றுள்ளவர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதைத்தவிர்த்து தபால் வாக்கு வழங்கவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6 ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணி கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் வாக்குச்சாவடி நேரம்  கூடுதலாக ஒரு மணி நேரம் உயர்த்தப்பட்டு, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடி வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், கடைசிநேரத்தில் வாக்களிக்கவரும் பெரும்பாலானா வாக்காளர்கள் அச்சத்தின் காரணமாக வாக்குச் சாவடிக்கு வருவதைத் தவிர்ப்பார்கள். இதனால் வாக்குப்பதிவு அதிகம்  குறைய வாய்ப்புள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் வாக்காளர்கள் பயத்தின் காரணமாக வாக்களிப்பது பாதிக்கும். வாக்காளர்கள் பாதுகாப்பாக 100 % வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் வகையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொரோனா பாதிக்கப்பட்டவர் களுக்கு தபால் வாக்குகள் வழங்க உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்.  

மேலும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் வாக்குப்பதிவு முன் நாளே பணிக்குச்சென்று மறுநாள் இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும்வரை பணியில் உள்ளதால் தேர்தல் ஆணையமே உணவு ஏற்பாடு செய்யவேண்டும். வாக்குப்பதிவு நேரம் மாலை 7 மணிவரை உயர்த்தப்பட்டுள்ளதால்   கிராமப்புறங்களில்தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் குறிப்பாகப் பெண் அலுவலர்கள் வாக்குபதிவு முடிந்து வீடு திரும்புவது இரவு 12 மணி ஆகும் நிலையில்  போக்குவரத்து வசதியினை தேர்தல் ஆணையம் வழங்கிடவேண்டும். 16 வது சட்டமன்றத் தேர்தலில் முழு ஈடுபாடுடன் பணிபுரியக் காத்திருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கையினை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நிறைவேற்றித்தரும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!