
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பாஜகவில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டுவருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவருமான கங்குலி, அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதை ஏற்கனவே பகிரங்கமாக தெரிவித்துவிட்டார்.
கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜக சார்பில், கங்குலி போட்டியிட அழைக்கப்பட்டார். ஆனால் கிரிக்கெட் மைதானம் தான் தனது களமே தவிர அரசியல் அல்ல எனக்கூறி பாஜக கொடுத்த வாய்ப்பை மறுத்துவிட்டார் கங்குலி. அதன்பிறகு மீண்டும் ராஜ்யசபா எம்பியாக வாய்ப்பு வந்தபோது, அதையும் கங்குலி மறுத்துவிட்டார்.
இப்படியாக ஏற்கனவே பலமுறை வந்த அரசியல் வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார் கங்குலி. அரசியல் தனது களமல்ல என்பதை அவர் தெளிவாக தெரிவித்துவிட்ட போதும், அவர் தொடர்பான அரசியல் தகவல்கள் பரவிவருகின்றன.
”மேற்கு வங்கத்திற்கு பாஜக வேண்டும்” என்ற முகநூல் பக்கத்தில், சவுரவ் கங்குலி பாஜகவில் இணைந்துவிட்டார். இந்த தகவலை பகிருங்கள் என பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவு தற்போது வைரலாக பரவிவருகிறது. ஆனால் கங்குலி எந்த கட்சியிலும் இணையவில்லை. அரசியலிலிருந்து விலகியே உள்ளார்.