பிரதமர் மோடியை 2 விஷயங்களுக்காக பாராட்டலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இளங்கோவன் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் உதவியுடன் சொத்து சேர்த்த சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான வருமான வரி சோதனை மிகச்சரியான நடவடிக்கை என தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக, சிதற்காய்(தேங்காயை உடைத்தல்) போல உடைந்திருப்பதாக விமர்சித்தார். வருமான வரி சோதனை தொடர்பாக, தன்னை சிறைக்கு அனுப்பினாலும், சிறையிலிருந்து திரும்பிவந்து இதற்கு காரணமானவர்களை பழிவாங்குவேன் என கூறும் அளவுக்கு தினகரனுக்கு திமிர் எங்கிருந்து வந்தது? என இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
மேலும், சசிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி சோதனை நடவடிக்கை சரியானது. இதை அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸின் தேசிய தலைமை குறிப்பிட்டிருந்தால், சோதனை சரியான நடவடிக்கைதான் என்பதை தேசிய தலைமையிடம் விளக்க தயாராக உள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசர், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக சில கருத்துகளை தெரிவித்துவருவதாகவும் இளங்கோவன் கூறினார்.
பாஜகவின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்மூடித்தனமாக காங்கிரஸ் எதிர்க்காது. ஆனால் தற்போதைய மத்திய பாஜக அரசு, அனைத்தையுமே தவறாகத்தான் செய்துகொண்டிருக்கிறது. இந்த மூன்றாண்டுகளில் பிரதமர் மோடி செய்த 2 விஷயங்கள் மட்டுமே பாராட்டுக்குரியவை. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது மற்றும் சசிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி சோதனை ஆகிய 2 நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடியை பாராட்டலாம் என இளங்கோவன் தெரிவித்தார்.