எட்டில் ஆறை தட்டித் தூக்கியதே நாங்க தான்... ஈரோடு தொகுதி வெங்கு மணிமாறனின் அசத்தல் கால்குலேஷன்!

By sathish kFirst Published Apr 4, 2019, 8:35 PM IST
Highlights

கடந்த 2016 தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள எட்டு தொகுதிகளில் எட்டையும் கைப்பற்றியது அ.தி.மு.க. அதேபோல், திருப்பூர் மாவட்டத்திலோ மொத்தமுள்ள எட்டு தொகுதிகளில் ஆறை கைப்பற்றியது அதனால நாங்க தான் ஜெயிப்போம்.

கடந்த 2016 தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள எட்டு தொகுதிகளில் எட்டையும் கைப்பற்றியது அ.தி.மு.க. அதேபோல், திருப்பூர் மாவட்டத்திலோ மொத்தமுள்ள எட்டு தொகுதிகளில் ஆறை கைப்பற்றியது அதனால நாங்க தான் ஜெயிப்போம் என ஈரோடு தொகுதி வேட்பாளர் அசால்ட் கால்குலேஷன் போட்டுள்ளார்.

இன்று நேற்றல்ல, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அ.தி.மு.க.வின் கோட்டையாகத்தான் விளங்குகிறது கொங்கு மண்டலம். ஈரோடு, திருப்பூர் இரண்டும் அதில் முக்கிய மாவட்டங்கள். இந்த ‘கோட்டை’ சென்டிமெண்ட், இந்த தேர்தலில் தனக்கு கைகொடுக்கும் என்று தெளிவாக கால்குலேஷன் போட்டபடி, செம்ம சந்தோஷமாக இருக்கிறார் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான வெங்கு மணிமாறன். 

அவர் கால்குலேஷனின் உள் சூட்சமம் இதுதான்...”கடந்த 2011 தேர்தலில் சோர்ந்து கிடந்த அ.தி.மு.க.வை விஸ்வரூபமெடுக்க வைத்தது, கோயமுத்தூரில் ஜெயலலிதா நடத்திய ‘மைனாரிட்டி கருணாநிதி அரசுக்கு எதிரான மக்கள் நல ஆர்பாட்டம்’எனும் நிகழ்ச்சிதான். இந்த ஆர்பாட்டத்துக்கு கூடிய கூட்டம் தான் தமிழக அரசியலை மீண்டும் ஜெயலலிதாவின் பக்கம் திருப்பி, ஆட்சியை பெற்றுத் தந்தது. அந்த தேர்தலில் அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை அள்ளிக் கொடுத்த மண்டலம் கொங்குதான். 

அதேபோல் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் மூலம் ஆட்சியை தக்க வைக்க ஜெயலலிதாவுக்கு தோள் கொடுத்ததும் கொங்கு மண்டலம்தான். இந்த மண்டலம் அள்ளிக் கொடுத்த வெற்றியால்தான் ஜெ., தொடர்ந்து முதல்வராக இருந்தார். இந்த கால்குலேஷனைதான் பெரிதும் நம்புகிறார் வெங்கு மணிமாறன். 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியினுள் ஈரோடு மாவட்ட தொகுதிகள் மட்டுமில்லாது, திருப்பூர் மாவட்டத்தின் தொகுதிகள் இரண்டும் வருகின்றன. கடந்த 2016 தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள எட்டு தொகுதிகளில் எட்டையும் கைப்பற்றியது அ.தி.மு.க. அதேபோல், திருப்பூர் மாவட்டத்திலோ மொத்தமுள்ள எட்டு தொகுதிகளில் ஆறை கைப்பற்றியது அ.தி.மு.க. அதனால்தான் அது ஆளும் கட்சியானது.

ஆனால் தி.மு.க.வோ இந்த மண்டலம் முழுக்கவே ஒன்று, இரண்டு என்றுதான் ஜெயிக்க முடிந்தது. கரூரில் ஒன்றையும், நீலகிரியில் ஒன்றையும், கோவையில் ஒன்றையும், திருப்பூரில் ஒன்றையும் மட்டுமே அக்கட்சி ஜெயித்தது. அந்த தேர்தல் நடந்து முடிந்து மூன்று வருடங்கள் நெருங்கி நிற்கும் நிலையில், ஆளும் அ.தி.மு.க. அரசின் மீது எந்த குற்றச்சாட்டினையும் மக்கள் வைக்கவில்லை, இப்போதும் கொங்கு மக்கள் ஆளும் அரசுக்கு ஆதரவாகதான் இருக்கின்றனர் என்பது பல நிகழ்வுகள் மற்றும் சில சர்வேக்களின் மூலம் உறுதியாகி இருக்கிறது. 
இதை துல்லியமாக அலசி ஆராய்ந்து கால்குலேஷன் போட்டு வைத்திருக்கும் வேட்பாளர் வெங்கு மணிமாறனோ ‘கொங்கு அ.தி.மு.க.வின் கோட்டை’ எனும் வெற்றி சென்டிமெண்டில் குஷியாக இருக்கிறார். 

ஆனால் அதேவேளையில்  எதிர்முகாமில், தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்குள் பெரிய ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில், ஆளுக்கொரு திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், தோழமை கட்சியினருக்கு இன்னமும் பூத் காசு போன்றவையும், பிரசாரத்திற்கான பணமும் பெரிதாய் செட்டிலாகவில்லையாம். இதனால் குழப்பமும், முறைப்புமாய் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கண்ணடிக்கின்றனர் ஆளுங்கட்சியினர்.  இந்த குழப்பமும் கூட சேர்ந்து ஆளுங்கட்சி வேட்பாளரை வெற்றிகரமாய் கரையேற்றும்! என்கிறார்கள்.

click me!