EPS vs OPS : இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.! ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Feb 21, 2024, 2:34 PM IST
Highlights

 மேகதாது அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி- இபிஎஸ் தகவல்

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகைகள் மற்றும் கூவத்தூர் சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அதிமுக நிர்வாகி தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஏ.வி.ராஜூ ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். அவருடைய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விட்டதாக கூறினார். தேர்தல் பணி மற்றும் அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், திமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அந்த கூட்டணியிலிருந்து எந்தெந்த கட்சிகள் வெளியேறுகின்றன என பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி முடிவாகும் என தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளர் யார்.?

யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. மாநிலத்திற்கு எதிரான பிரச்சனைகள் வருகிற போது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அதனால் தான் அதிமுக சுயமாக முடிவெடுத்து இப்போது தேர்தலை சந்திக்கிறது என கூறினார். இரட்டை இலை சின்னத்தை முடக்கப்படும் என ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு பதில் அளித்தவர், இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்த பின்னர் எப்படி முடக்க முடியும்? ஓபிஎஸ் ஆசை நிராசையாக தான் முடியும் என தெரிவித்தார். 

ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது

தமிழக நிதி நிலை தொடர்பாக கூறிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு என அறிவித்த பல திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன, நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட குடிநீர் திட்ட பணியும் சுணக்கமாக உள்ளது.

விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணிகளும் கிடப்பில் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம். திராணி இருந்தால் இந்த அரசை செய்ய சொல்லுங்கள். மேகதாது அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு. திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,

இதையும் படியுங்கள்

கோவை பாஜக நிர்வாகியை கைது செய்ய களம் இறங்கிய போலீஸ்..! ஷாக்கில் அண்ணாமலை

click me!