சசிகலா காலில் விழுந்தது ஏன்.? ஓபிஎஸ் பெயரில் 5 வேட்பாளர்கள்.? மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்-எடப்பாடி அதிரடி பதில்

By Ajmal KhanFirst Published Mar 29, 2024, 10:08 AM IST
Highlights

 பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தோல்வி பயத்தின் காரணமாகவே  அவதூறாக பேசி வருவதாக கூறினார். 
 

அதிமுக அலை வீசுகிறது

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார், நிகழ்வில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில், அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது,  

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என் தெரிவித்தார். அப்போது தமிழகத்தில் யாருக்கு சாதகமான அலை வீசுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது, அது அதிமுக அலையாக வீசுகிறது, அதிமுக என்னென்ன சாதனைகள் செய்தோம் இனி என்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள், 

அவதூறு பரப்பும் திமுக

அதிமுக பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும், ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறது, தோல்வி பயத்தின் காரணமாகவே  அவதூறாக பேசி வருகிறார்கள்,   கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம், கூட்டணியில்  இருக்கும் போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது, அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம் கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது திமுகவிற்கு கைவந்த கலை, 

ஓபிஎஸ் பெயரில் 5 வேட்பாளர்கள்

கூட்டணி கட்சியினருக்கு அதிமுக என்றுமே விசுவாசமாக இருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.  ஓபிஎஸ்க்கு எதிராக ராமநாதபுரத்தில் அதே பெயரில் 5 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  நஜனநாயக நாட்டில் யாரும் பெரியவர்களில் அனைவரும் சமமாக உள்ளனர், ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக் கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள் என கூறினார். 

சசிகலா காலில் விழுந்தது ஏன்.?

அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தி சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவு அல்ல என தெரிவித்தார். சசிகலா காலில் விழுந்த போட்டாவை காட்டி உதயநிதி பிரச்சாரம் செய்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,

வேறு யாருடையே காலிலா விழுந்தேன், 3வது நபர் காலிலா விழுந்தேன் என் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக்கொடை பிடிக்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

click me!