மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழி: முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் அதிரடி.

Published : Sep 28, 2020, 11:15 AM ISTUpdated : Sep 28, 2020, 11:18 AM IST
மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழி: முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் அதிரடி.

சுருக்கம்

தமிழை, தமிழர்களை அவமதிக்கிற இந்த ஏற்கத்தகாத நிலையினால் தமிழக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழி: முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அதிரடி. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது. 
மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சுமார் 12 ஆயிரம் வருட இந்திய வரலாற்றை எழுதுவதற்கான தகுதியற்றவர்களைக் கொண்டு மத்திய அரசு அமைத்துள்ள குழுவை உடனே கலைக்க வேண்டும். இந்தியாவின் உண்மையான வரலாற்றை முன்வைக்கும் விதமாக இணையவழியில் தொடர் உரையரங்கத்தினை தமுஎகச நடத்துகிறது. ஆய்வுப்புலத்தில் மதிக்கத்தக்க பங்காற்றி வரும் தமிழக, இந்திய வரலாற்றாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிவிப்புகள், விண்ணப்பங்கள், ஒப்புகைச்சீட்டுகள் போன்றவற்றில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. தமிழை, தமிழர்களை அவமதிக்கிற இந்த ஏற்கத்தகாத நிலையினால் தமிழக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி 53 பேரை கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத டெல்லி போலிசார், இந்த வன்முறைக்கு ஆளானவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் பொய்வழக்கு புனைந்து  கைது செய்துவருவது கண்டிக்கத்தக்கது. மாற்றுக்கருத்தாளர்களை ஒடுக்குவதற்கு மத்திய அரசின் உள்துறை மேற்கொண்டுள்ள இந்த ஆள்தூக்கும் போக்கை கைவிடவேண்டும்.- மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், பேரா அருணன், கெளரவத்தலைவர்  ச.தமிழ்ச்செல்வன்,  துணைத்தலைவர்கள் நன்மாறன், திரைக்கலைஞர் ரோஹினி, நந்தலாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்