
கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து அதிமுக பொது செயலாளர் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு பதவி பிராமாணம் செய்யும் நிகழ்ச்சி, கவர்னர் வராததால், ரத்து செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு ஒ.பன்னீர்செல்வம், திடீரென மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணிநேரம் தியானம் செய்து எழுந்த அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலா மீது பரபரப்பு புகார் கூறினார்.
இதையடுத்து, சசிகலா மீது அதிருப்தி தெரிவித்து இருந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் நேற்று மாலை வரை, ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையில் நேற்று அதிமுக அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏ கூட்டத்தில் ஏராளமான எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், அனைத்து எம்எல்ஏக்களையும், சொகுசு பஸ்கள் மூலம், கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளதாக தகவல்கள் பரவியது.
மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் பலர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என, அவர்களை பல்வேறு பகுதிகளில் சசிகலா தரப்பினர், சிறை வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல் வரிசையில் அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் அருகில் உட்கார வைக்கப்பட்ட அதிமுக அவை தலைவர் இ.மதுசூதனன், தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிவிப்பதற்காக, அவை தலைவர் மதுசூதனன், சென்னை கரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரடியாக சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறிய அவர், தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.