கொரோனா பரவலுக்கு எலக்ஷன் கமிஷன் தான் காரணம்.. கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை.. ஹைகோர்ட் காட்டம்.!

By vinoth kumarFirst Published Apr 27, 2021, 9:44 AM IST
Highlights

கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத  அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத  அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், வேலாயுதம்பாளையம் தனியார் கல்லூரியில், இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் அனைவரின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது தனி மனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும். மேலும், வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும். மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும். கிருமிநாசினி வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 4,900 சதுர அடி மற்றும் 3,400 சதுர அடி என இரண்டு அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு சுயேட்சைகளின் ஏஜெண்டுகளை தவிர வேறு யாரையும் அனுப்பப் போவதில்லை. 9 அரசியல் கட்சிகளில் 7 அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பும். வாக்கு எண்ணிக்கைக்காக ஆறு கூடுதல் மேஜைகள் போடப்பட்டு உள்ளது என்றார். 

அப்போது நீதிபதிகள், பிரசாரம் தொடங்கிய நாட்களிலிருந்து வேற்று கிரகத்தில் இருந்தீர்களா. அரசியல் கட்சிகளும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம். வாக்கு எண்ணிக்கையின்போது தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்துள்ளது. கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல், தனி மனிதஇடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிவதை கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். என்று கூறி வழக்கை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

click me!