இந்த எண்ணிக்கையெல்லாம் பத்தாது... இதை உடனே தாமதிக்காம செய்யுங்க... அலர்ட் செய்யும் டாக்டர் ராமதாஸ்..!

By Asianet TamilFirst Published Apr 26, 2021, 9:22 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எகிறிவரும் நிலையில், தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஏற்ற வகையில் புதிய மருத்துவர்களை நியமிக்காமல், ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்களுக்குக் கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்துவது சிக்கலை உருவாக்கும்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் 500-க்கும் குறைவாக இருந்த தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 15 ஆயிரத்து 659 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 180 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 4,009 என்ற அளவில்தான் இருந்தது. கடந்த 25 நாட்களில் கொரோனாவுக்கு மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை 25 மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதிதான் உச்சகட்டத்தை எட்டியது. அப்போது தமிழ்நாட்டில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 896 மட்டுமே. இப்போது மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை அதைவிட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. கொரோனா இரண்டாம் அலை தாக்கத் தொடங்கிய பிறகு 350 மருத்துவர்கள் மட்டுமே தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நிச்சயம் போதுமானதல்ல.
ஒரு மருத்துவர் ஓய்வே இல்லாமல் சிகிச்சை அளித்தால்கூட ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 14 பேருக்கு மருத்துவம் அளிக்க வேண்டும். ஒரு நோயாளியின் உடல்நிலையை ஆய்வு செய்து 5 நிமிடத்திற்குள் மருத்துவம் அளிக்க வாய்ப்பே இல்லை. ஓய்வு இல்லாமல் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றும்போது நோயாளிகளுக்குத் தரமாக மருத்துவம் அளிக்க முடியாது. கொரோனா முதல் அலையின்போது அரசு மருத்துவர்கள் இரு வாரம் தொடர்ந்து பணியாற்றினால், ஒரு வாரம் தனிமைப்படுத்தி ஓய்வளிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது
இதனால் மருத்துவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையைப் போக்க அதிக எண்ணிக்கையில் தற்காலிகமாக மருத்துவர்களைக் கூடுதலாக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த தகுதியும் திறமையும் கொண்ட இளைஞர்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு கவுரவமான ஊதியம், பணி நிலைப்பு செய்வதற்கான உத்தரவாதம் உள்ளிட்ட வாக்குறுதிகளைத் தமிழக அரசு அளிக்கும் நிலையில், அவர்கள் தமிழக அரசின் கொரோனா ஒழிப்புப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்வருவார்கள். இன்றைய சூழலை ஓர் அவசர காலமாகக் கருதி தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மருத்துவர்கள் அனைவரும், கொரோனா ஒழிப்புப் போரில் ஈடுபட முன்வர வேண்டும்.
எனவே, புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, புதிய மருத்துவர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைத்து, போதிய ஓய்வை வழங்கி அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயை ஒழிப்பதற்கான போரில் தமிழக அரசு விரைவாக வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்". என்று அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!