12 ஆண்டுகளாக வகித்து வந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை தீவிர ஆதரவாளருக்கு விட்டுக்கொடுத்த இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Apr 28, 2022, 7:30 AM IST
Highlights

அதிமுகவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பேரூர், நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருந்த சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் தேர்தல் 

அதிமுகவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பேரூர், நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 9 பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட இணைச்செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், பொருளாளர் என 9 பதவிகளுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட்டது. சேலம் புறநகர் மாவட்டத்திற்கான தேர்தல் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இளங்கோவன் நியமனம்

இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தனது விருப்ப மனுவை பெற்றார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் இளங்கோவனும் மனுவை பெற்றார். இந்நிலையில், அதிமுக தலைமையிலிருந்து கழக அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளலார் பொறுப்பு இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை வளையம்

 இதன் மூலமாக 2011ம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக புறநகர் மாவட்டம் செயலாளராக பதவி வகித்து வந்த எடப்பாடி பழனிசாமி வசனம் இருந்து இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எடப்படி பழனிசாமியின் வலது கரமாக அறியப்படும் இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, கொடநாடு வழக்கின் விசாரணை வளையத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!