துக்க வீட்டில் தூரச் சென்ற எடப்பாடி... 4 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா -ஓ.பி.எஸ் கண்ணீர் சந்திப்பு..!

By Thiraviaraj RMFirst Published Sep 1, 2021, 3:24 PM IST
Highlights

சசிகலா வரும்போது அவர் அருகில் இல்லை. தகவல் கிடைத்த உடன் அந்த இடத்தை விட்டு கிளம்பி வேறு அறைக்கு சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
 

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதயநோய் நிபுணர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி காலை 6.45 மணிக்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.

மறைந்த விஜயலட்சுமியின் உடலுக்கு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், உதயநிதி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்,யாரும் எதிர்பாராத வகையில் சசிகலாவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஓபிஎஸ் கண் கலங்கியபோது, அவரது கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார். நான்காண்டுகளுக்கும் மேலாக அரசியலில் நேரெதிராக இருந்த ஓபிஎஸுக்கு நேரில் சென்று சசிகலா ஆறுதல் கூறியது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், டிடிவி.தினகரன் சமூகவலைதளங்கள் மூலம் இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை. இதில் சில விஷயங்கள் கவனத்தில் கொள்ள வைத்துள்ளது. சசிகலா வந்ததும் கண்கலங்கிய ஓ.பி.எஸின் கையை பிடித்து ஆறுதல் சொன்னார் சசிகலா. அடுத்து ஓடி வந்து வணக்கம் வைத்தார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அனைத்து தலைவர்கள் வந்து சென்றபோதெல்லாம் ஓ.பி.எஸ் அருகிலேயே இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சசிகலா வரும்போது அவர் அருகில் இல்லை. தகவல் கிடைத்த உடன் அந்த இடத்தை விட்டு கிளம்பி வேறு அறைக்கு சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
 

click me!