குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த பெண்கள் ஓட்டையும் வாரிக்குவித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணத்தில், மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று மண்ணை அள்ளிப்போட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப்பங்கீட்டை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.
தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அதிமுகவும், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, ஆட்சியை பிடிக்கும் முனைப்பிலும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல் என்றாலே, கட்சிகளின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது. எந்தெந்த கட்சிகள் என்னென்ன இலவசங்களை அறிவிக்கப்போகின்றன, கவர்ச்சிகரமான திட்டங்கள் என்னென்ன என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
அந்தவகையில், இந்த தேர்தலுக்கான முக்கியமான அறிவிப்பாக, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்பதுதான் அமைந்துள்ளது. திருச்சி சிறுகனூரில் நடந்த திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால் அந்த வரவேற்பை வாக்குகளாக அறுவடை செய்யவிடாமல், கூடுதலாக ரூ.500 சேர்த்து, மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அறிவிக்கவிருந்த இந்த திட்டத்தை தெரிந்துகொண்டு முன்கூட்டியே திமுக அறிவித்துவிட்டதாக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுகவின் திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் அறிவித்திருந்தாலும், அதை நீர்த்துப்போக செய்ய, கூடுதலாக 500 ரூபாயை சேர்த்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று ஒரே போடாய் போட்டு பெண்களின் ஆதரவை குவித்துவிட்டார் முதல்வர் பழனிசாமி.