
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார். உடன் சென்ற மற்றொரு மீனவரும் இத்தாக்குதலில் காயமடைந்தார்.
இலங்கை கடற்படையின் இந்த அராஜகத்தைக் கண்டித்து தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் கொல்லப்பட்ட பிரிட்சோ குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தூதரை வரவழைத்து இந்தியாவின் எதிர்ப்பை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள எடப்பாடி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியிருப்பது காட்டுமிராண்டித்தனம் என்று அக்கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.