
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்திற்கு செய்த சதியே காரணம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடையில் வழங்கும் பாமாயில், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, உள்ளிட்டவைகளை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்க வேண்டிய எந்த பொருட்களும் முறையாக வழங்கபடுவதில்லை எனவும், ஆனால் பொருட்கள் வாங்கியது போன்ற மெசேஜ் மட்டும் செல்லுக்கு வந்துவிடுவதாக பொதுமக்கள் பலர் குறை கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்களும் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படும் என்றும் போதுமான அளவு ரேஷன் பொருட்கள் இருப்பில் உள்ளதாவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.
ஆனால் மீண்டும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் குறித்த எந்த பிரச்சனையும் தீர்வுக்கு வரவில்லை என பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், பருப்பு பாமாயில், மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இன்னும் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 54 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மத்திய அரசு 27 ஆயிரம் கிலோ லிட்டராக குறைந்து விட்டதாகவும், சிறப்பு விநியோக திட்டத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தை திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு நிறுத்தியதே இதற்கு காரணம் எனவும் காமராஜ் தெரிவித்தார்.