
டிடிவி தினகரன் வெற்றி பெற்றதும் எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை எங்கள் பக்கம் வருவார்கள் எனவும் அதிமுகவை வழிநடத்த டிடிவியால் மட்டுமே முடியும் எனவும் அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றது.
சசிகலாவே அடுத்த சி.எம் என கூறி வந்த அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி அவரை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவியை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் ஆளுங்கட்சியினர்.
இதையடுத்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இதைதொடர்ந்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றின் முடிவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரன் வெற்றி பெற்றதும் எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை எங்கள் பக்கம் வருவார்கள் எனவும் அதிமுகவை வழிநடத்த டிடிவியால் மட்டுமே முடியும் எனவும் தெரிவித்தார்.
பொங்கலுக்குள் எடப்பாடி ஆட்சி முடிந்து விடும் என்று நாஞ்சில் சம்பத் கணிப்பு தெரிவித்துள்ளார்.