
எவன் திட்டினாலும் கவலையில்லை என்று, தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவை ஏகபோகமாக நடத்தி வருகிறது தமிழக அரசு. அந்த வகையில் 28 வது மாவட்டமாக இன்று கோயமுத்தூர் மாவட்டத்தில் விழாவை நடத்தினார்கள்.
இதில் விமானம் ஏறுவதற்கு நேரமானது பற்றி கூட கவலைப்படாமல் அரசின் நலத்திட்டங்களை ஏகத்துக்கும் பட்டியலிட்டு ’நாங்க என்ன எங்க குடும்ப விழாவா நடத்துறோம்? மக்கள் நலனுக்கான விழாவைதானே நடத்துறோம்!’ என்று ஸ்டாலினை நோக்கி பொங்கிவிட்டாராம்.
உணர்ச்சி மேலிட்டதன் விளைவாக அடிக்கடி தொண்டை வறள, அவ்வப்போது தண்ணீர் வாங்கிக் குடித்து தன் எனர்ஜியை ரீசார்ஜ் செய்து கொண்டவர் மீண்டும் போட்டுத் தாக்கியிருக்கிறார் ஸ்டாலினை...
“இந்த விழா எவ்வளவு பிரம்மாண்டமான விழா? அதுவும் யாருக்காக நடக்கிறது! மக்களுக்காக நடக்கிறது. பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் மக்கள் பணியே தன் வாழ்க்கை என்று வாழ்ந்தவர்.
அவரது நூற்றாண்டு விழாவை நாங்கள் கொண்டாடுவது மக்கள் நலனுக்காக. தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்படும் இந்த விழாவில் மக்களுக்கான கோடிக்கணக்கான செலவில் நலத்திட்டங்களை அறிவித்தும், தொடங்கி வைத்தும் அள்ள அள்ள நல்லது செய்து கொண்டிருக்கிறது அம்மாவின் அரசு.
ஆனால் காழ்ப்புணர்ச்சியால் இந்த விழாவை விமர்சிக்கிறார் தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின். கோயமுத்தூரில் நடக்கும் இந்த விழாவை கூட எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று வழக்கெல்லாம் போட்டுப் பார்த்தார். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை.
நாங்களென்ன உங்களைப் போல் குடும்ப விழாவா நடத்தினோம்? உங்கள் குடும்பத்துக்காக அரசு பணம் 282 கோடியை செலவு செய்து இதே கோவையில் செம்மொழி மாநாடு என்று ஒன்றை நடத்தினீர்களே! அது யார் பணம்?” என்று கண்கள் சிவக்க, மேடையிலிருந்த அமைச்சர்கள் ஆர்ப்பரித்தார்களாம்.
எடப்பாடியாருக்கும் கோவம் வருமுல்ல!