இவருக்கு குறை சொல்லுறதே வேலையாப் போச்சு ! ஸ்டாலினை வெளுத்து தொங்கவிட்ட எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Oct 29, 2019, 9:21 PM IST
Highlights

அரசை குறை கூறுவதையே மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும் பொய்யான வதந்தியை பரப்பி, மக்களிடையே தவறான எண்ணம் ஏற்படுவதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பிரிட்டோ.  விவசாய பணிகளுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இவரது சொந்த நிலத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது.

இந்நிலையில், கடந்த 25ந்தேதி மாலை அந்த  ஆழ்துளை கிணற்றில் பிரிட்டோவின் 2 வயது மகனான சுஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான்.  அவனை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்றன.  எனினும், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகள் பலனின்றி சுஜித் இன்று சடலமாக மீட்கப்பட்டான். பின்னர் பிரேத பரிசோதனைக்கும் பின் அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பலியான  சுஜித்தின் வீட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறி, சுஜித்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.  இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர், ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்தவுடன் அதுபற்றிய தகவல் அறிந்து, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மக்கள் வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிகாரிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும், தனியார் நிறுவனத்தினரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  குழந்தையை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.  எனினும் அது பலனளிக்கவில்லை என்று கூறினார்.  

சுஜித் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், அதிமுக. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  அரசின் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு குழந்தையை மீட்க முடியவில்லை என தவறான தகவலை மு.க. ஸ்டாலின் கூறி விட்டு சென்றார்.  எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எந்த அளவுக்கு அரசு செயல்பட்டது என ஊடகங்கள் அறியும்.  பொய்யான வதந்தியை பரப்பி, மக்களிடையே தவறான எண்ணம் ஏற்படுவதற்கான முயற்சியை அவர் மேற்கொள்கிறார்.

இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் இதற்கு முன்பு மீட்பு பணிகள் நடந்ததில்லை.  மீட்பு பணிகள் குறித்த மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவறானவை என தெரிவித்தார்..

எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டுமென்று தவறான எண்ணத்துடன் செயல்படுகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம் கடுமையாக குற்றம்சாட்டினார்.

click me!