ஐபேக் கம்பனி அறிக்கையில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து.. டி.ஆர் பாலுவை எச்சரிக்கும் முன்னாள் எம்பி.

By Ezhilarasan BabuFirst Published Jan 1, 2021, 2:18 PM IST
Highlights

அப்போது தமிழர்களை இலங்கையில் அழித்ததெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருந்தார்கள். நான் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. எங்களைப் போன்றவர்கள் எல்லாம் இலங்கையில் நடந்த  துயரத்தைக் கலைஞரிடம் எடுத்துச் சொன்னதெல்லாம் உண்டு. அப்போது டெல்லியில் பெரியப் பொறுப்பிலிருந்த டி.ஆர்.பாலு கண்டுகொள்ளவேயில்லை.

இலங்கைவாழ் தமிழர் நலம் காக்கும் பணியில் நமது இந்தியபிரதமரின் செயல்திறனை குறைசொல்ல அருகதையற்ற கட்சி திமுக என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. பி இராமலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: திமுக நாடாளுமன்ற  குழுத்தலைவர், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு ஈழத்தமிழர்கள் சுயமரியாதையோடு வாழவும் இலங்கையில் தமிழ் மாகாணங்களை  ஒழிப்பதைக் குறித்தும் திடீரென அறிக்கைவிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாமே வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான பித்தலாட்ட கணக்குதான். வேறெதற்கு இந்த திடீர் கரிசணம். 

நடந்து முடிந்த 2009  முள்ளிவாய்க்கால் போரின் போது திமுக, மத்திய மன்மோகன்சிங் காங்கிரஸ் அரசில் இடம்பெற்றது. அப்போது தமிழர்களை இலங்கையில் அழித்ததெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருந்தார்கள். நான் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. எங்களைப் போன்றவர்கள் எல்லாம் இலங்கையில் நடந்த  துயரத்தைக் கலைஞரிடம் எடுத்துச் சொன்னதெல்லாம் உண்டு. அப்போது டெல்லியில் பெரியப் பொறுப்பிலிருந்த டி.ஆர்.பாலு கண்டுகொள்ளவேயில்லை. 

2010-க்கு பிறகு தமிழகத்தில் திமுக மீது எதிர்வினைகள்  பலத்தரப்பில் வர என்ன செய்வதென்று கலைஞர் நினைத்தார். அதை எப்படியாவது அந்த  குற்றச்சாட்டிலிருந்து  விடுபடவேண்டுமென்று  டெசோ என்ற  அமைப்பைத்  திரும்பவும் கலைஞர் கூட்டினார். அரசியலிலிருந்து  ஒதுங்கி இருந்த கே.எஸ்.இராதாகிருஷ்ணனை  அழைத்து  திமுகவில் சேர்த்து டெசோ  பணிகளைக்  கவனிக்கச் சொன்னார். அவரும்  டெசோவுக்காக கடுமையாக உழைத்தார். அவர் இப்போது திமுகவில் எங்கிருக்கிறார் என்று தெரியாமலே போய்விட்டார். 

டி.ஆர்.பாலுவின் ஈழத்தமிழர் அக்கறை. ஒவ்வொருவருக்கும் தெரியும் எப்படி ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள், எப்படி திமுக கண்டுகொள்ளாமல் இருந்ததென்று. சரி, முள்ளிவாய்க்கால் நடந்து முடிந்த பிறகும் இவர்கள் திருந்தவில்லை. இதே டி.ஆர்.பாலு கொழும்பிற்குச் சென்று  தமிழர்களின் இரத்தத்தைக்  கையில் வைத்திருந்த  ராஜபக்சேவிடம்  கைகுலுக்கினார்கள், விருந்து உண்டார்கள், பரிசு பெற்றார்கள். அதெல்லாம் மானங்கெட்டத் தனமில்லையா? அதே டிஆர் பாலு அறிக்கை விட்டுள்ளார் என்றால் என்ன வேடிக்கை மனிதர், என்ன நேர்மை இவர்களிடம் உள்ளது. 

முள்ளிவாய்க்காலில் உயரிழந்தவர்களின் குடும்பத்தினரும், பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களும் இவர்களைப்பற்றி போங்கடா போகத்தப் பசங்களா’என்று  நினைக்கமாட்டார்களா? என்பதைபற்றி கவலைப்படாமல் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்று முள்ளிவாய்க்கால் தமிழர் இனபடுகொலை நடந்தபோது மத்திய அமைச்சரவையில்  இருந்துகோண்டு வேடிக்கை பார்த்தவர்கள் வெட்கமில்லாமல் யோக்கியர் போல் அறிக்கை விடுவதை சகிக்கமுடியவல்லை.

‘கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு!’ என்ற கதைதான் டி.ஆர்.பாலுவின் அறிக்கை, இதெல்லாம் போலித்தனங்கள் போலி முகங்கள். திமுகவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் பலர் ராஜபக்சேவுடன்  தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர். , இலங்கை அரசில் தனக்கான  வியாபாரங்களைப்  பெருக்கிக்கொள்பவர்கள் திமுக தலைவர்கள் . அப்படிப்பட்டவர்கள்  அறிக்கையில் என்ன நேர்மை இருக்க போகிறது. இலங்கை அரசு தற்போது அறிவித்துள்ள மகாணங்கள் ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை மகிழ்ச்சியோடு இதுவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை வரவேற்கவும் இல்லை. பின் எதற்க்காக டிஆர்பாலு மத்திய அரசை குற்றம்சாட்டுகிறார். 

"தான்திருடி பிறரை நம்பார்" என்பதுபோல திமுக தேர்தலுக்காக நீலிக்கண்ணீர் வடித்தாலும் முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நடந்தபோது 2ஜி வழக்கிற்காக மண்மோகன்சிங் அரசிடம் திமுக மண்டியிட்டு கிடந்ததையும் ,இராஜிவ்படுகொலைக்கு பழிதீர்த்துக்கொள்ள ஒட்டுமொத்த ஈழதமிழ் இனத்தையும் அழிக்க உதவிய காங்கிரஸ் அரசில் பலம் பொருந்திய கூட்டணி  தலைவராக  டி.ஆர் பாலு அப்பொது இருந்தார். அப்பொது தமிழர்களுக்காக வடியாத கண்ணீர் இப்போது நீலிக்கண்ணீராக வடிகிறது. அதை தமிழக வாக்காளர்கள் நம்புவார்கள் என்று நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். எந்த பிரச்சனையிலும் உண்மையாக இருக்கவேண்டும் என்று கருதுகிற டி.ஆர் பாலு போன்ற திமுகவின் மூத்த தலைவர்களாவது ஐபேக் கம்பனி அறிக்கையில் அப்படியே கையெழுத்து போடாமல் சொந்தமாக சிந்தித்து அறிக்கை விடுவது தான் திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது என எச்சரிக்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!