திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் , அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போவார்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கடலூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். விரைவில் அதிமுக ஆட்சி கவிழப்போவது உறுதி என தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகப்பெரிய சாதனை, இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும். தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக திமுக எம்.பிக்கள் உள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து ஏன் தண்ணீர் எடுத்துவர வேண்டும்.
மக்களுக்காக உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் திமுகவினர் தான் என்கிற வகையில் அவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.