விநாயகர் சிலை தடைக்கு திமுகவின் தீய கொள்கையே காரணம்.. நடிகை காயத்ரி ரகுராம் அட்டாக்..!

By Asianet TamilFirst Published Sep 4, 2021, 9:01 AM IST
Highlights

இந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க திமுக முயல்கிறது என்று பாஜக கலை பிரிவு தலைவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
 

விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் இந்து அமைப்புகள் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இந்து அமைப்புகளும் பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில ட்விட்டர் பதிவில், “விநாயகர் சதுர்த்தி உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு இந்துகளும் நம்பும் கலாச்சாரம், பண்பாடு, உணர்வு. அதனால் ஒற்றுமையுடன், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் திமுக திணிக்கிறது.
அரசின் நடவடிக்கை, விநாயகர் சிலைகளை செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் பாதிக்கிறது. இது, அவர்களின் வயிற்றை அடிக்கிறது. இந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க திமுக முயல்கிறது. டாஸ்மாக் கடை, பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்?
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலையை 5 அடிக்கு கீழ் வைக்க அனுமதி இருந்தது, அதிக எண்ணிக்கையிலான ஊர்வலம் நடக்கவில்லை. தற்போதைய மாநில அரசு இந்துக்களுக்கு மட்டும் ஏன் கடுமையாக இருக்கிறது? விநாயகர் சதுர்த்தியை ஏன் தடை செய்ய வேண்டும்? திமுக தீய கொள்கை காரணத்தால் மட்டுமே.” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

click me!