இது கருணாநிதி சொன்னது... கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் செய்யணும்.. கேட்கிறார் திருமாவளவன்..!

By Asianet TamilFirst Published Sep 3, 2021, 9:55 PM IST
Highlights

கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் உயர் நீதிமன்ற ஆணையின்படி வேலை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களைத் தமிழக அரசு உடடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கருணாநிதி ஆட்சியின் போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு மூப்பு முறையில் நடைபெற்று வந்தன. 2009, 2010ஆம் ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களில் 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1258 பட்டதாரி தமிழாசிரியர்கள்  இன்னும் பணிநியமனம் செய்யப்படவில்லை.
இவர்கள் வேலை பெறவிருந்த சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர், அதிமுக தலைமையிலான  அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 5000 பட்டதாரி ஆசிரியர்களும் 1258 பட்டதாரி தமிழாசிரியர்களும் பணிநியமனம் பெற இயலாமல் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். அவ்வாறு பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரையில்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து (TET) விலக்கு பெற்றனர்.  ஆனாலும் இதுவரையில் அவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படாமல்  புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர். 
இந்நிலையில்,  22-7-2013 அன்று கருணாநிதி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்று  அன்று அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாகப் பெரும் பாதிப்படைந்துள்ள 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு,  கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் உயர் நீதிமன்ற ஆணையின்படி வேலை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 

click me!