
தேமுதிக பொருளாளர் பிரேமலதா கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலுக்கு வந்திருந்தார். அங்கு தோஷ பரிகாரம் செய்த பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவின் 100 நாட்கள் ஆட்சி நன்றாகவும் நடுநிலையோடும் உள்ளது. இது அப்படியே தொடர வேண்டும்.” என்று தெரிவித்தார். முன்னாள் அதிமுக அமைச்சர் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் குறித்து பிரேமலதாவிடம் கேட்கப்பட்டதற்கு, “தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
இதேபோல அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் குறித்த கேட்ட கேள்விக்கு, “பொதுமக்களும் அர்ச்சகர்களும் இதை ஏற்றுக் கொண்டால் நாங்களும் இதை ஏற்றுக் கொள்வோம்” என்று பிரேமலதா தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, “உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் அறிவித்தாலும் அதை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். விஜயகாந்த் நலமுடன் உள்ளார்” என்றும் பிரேமலதா தெரிவித்தார்.