DMK Vs BJP: கன்னியாகுமரியில் மானத்தை மாறி மாறி கப்பலேற்றும் திமுக - பாஜக.! உச்சக்கட்டத்தில் போஸ்டர் யுத்தம்.!

By Asianet TamilFirst Published Jan 23, 2022, 7:44 PM IST
Highlights

இந்த போஸ்டர் யுத்தம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போஸ்டர் யுத்தம் தொடருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக - பாஜக இடையேயான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு கட்சியினரும் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறார்கள். 

பொங்கல்  திருநாளையொட்டி திமுக அரசு, 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ரொக்கப் பரிசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடத்தில் இருந்தது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பை மட்டும்  திமுக அரசு வழங்கியது.  இதனால், பொதுமக்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். ஆனால், அதிமுகவினர், “தங்கள் ஆட்சியில்  ரூ.2500 வழங்கியபோது, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுகவினர் கோரினர். அதன்படி இந்தப் பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்றும் திமுக அரசு ஏமாற்றுவதாகவும்” விமர்சித்தனர். இதேபோல் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவும் அன்று ரூ.5000 வழங்கவில்லை என்று திமுக அரசை விமர்சித்தனர்.

 

மேலும் பொங்கல் பரிசில் புளியில் பல்லி இருந்ததாகவும், வெல்லம் உருகுகிறது என்றும் அதிமுக, பாஜக திமுக அரசை விமர்சித்தன.  இந்தப் பொருட்கள்  எங்கு கொள்முதல் செய்யப்பட்டன என்றும் இக்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில் பாஜக செல்வாக்காக உள்ள கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் பொங்கல் பரிசு கேட்டு போஸ்டர் அடித்து ஒட்டினர். அதில், “‘தமிழக மக்களுக்கு போலியான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசே, பொங்கல் பரிசு ரூபாய் 5000 எங்கே?’ என கேள்வி எழுப்பியது பாஜக.  பாஜகவினர் ஒட்டிய இந்த போஸ்டர் திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட திமுகவினர் பாஜகவுக்கு போஸ்டர் மூலமே பதிலடிக் கொடுத்தனர்.  நாகர்கோவில் மாநகர திமுக சார்பில், ‘ஒன்றிய பாஜக அரசே, தேர்தலின் போது ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவேன் எனச் சொன்னது என்னாச்சு?’ என போஸ்டர் ஒட்டப்பட்டது. மேலும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநில தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். இப்போது பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த கல்வி உதவித் தொகை என்னானது என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பினர். 

இத்தோடு இந்த போஸ்டர் யுத்தம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போஸ்டர் யுத்தம் தொடருகிறது. திமுகவினர் ஒட்டிய புதிய போஸ்டரில்,  ‘நாங்கள் விமான நிலையங்களை கூவி... கூவி விற்கமாட்டோம். ரூபாய் 15 லட்சம் தருவதாக பித்தலாட்ட வாக்குறுதி கொடுக்க மாட்டோம். வங்கிகள் பி.எஸ்.என்.எல் போன்ற ஏராளமான இந்திய பொதுநிறுவனங்களை அழிக்கமாட்டோம். எங்கள் உயிரைக் கொடுத்தாவது சகோதரத்துவம், சமூகநீதி, சமத்துவம் காப்போம்’ என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.  இதைப் பார்த்து மீண்டும் சீறும் பாஜகவினர், திமுகவுக்கு பதிலடியாக புதிய போஸ்டரை கன்னியாகுமரியில் ஒட்டியுள்ளனர்.

 

‘அறிவாலய அரசே... பதில் சொல்’ என்ற போஸ்டரில், ‘கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என்னாச்சு? மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என்னாச்சு? மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி என்னாச்சு? இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்னாச்சு?’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் போஸ்டரின் இறுதியில், ‘இது தொடரும்’ என பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். பொங்கலுக்கு முன்பு தொடங்கிய இந்த போஸ்டர் யுத்தம், தேர்தல் முடியும் வரை முடியாது போலிருக்கிறது.

click me!