ஆளுநர் உரை ஜனநாயகத்திற்கு விரோதமானது!! திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

First Published Jan 8, 2018, 10:40 AM IST
Highlights
dmk MLAs boycotts governor speech and walk out


ஆளுநர் உரை ஜனநாயகத்திற்கு விரோதமானது என தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் உரையை தொடங்கினார். ஆளுநர் வணக்கம் கூறியதுமே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்தும் பொருட்டு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை “உட்காருங்கள்” “உட்காருங்கள்” என ஆளுநர் தமிழில் கூறினார். விவாதத்தின் போது உங்கள் வாதத்தை முன்வையுங்கள். முதலில் நான் பேசிக்கொள்கிறேன் என ஆளுநர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமைதியாகினர்.

பின்னர் ஆளுநர் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும்போதே, அதை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இரட்டை இலை வழக்கின்போது, பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவுதான் உள்ளது என தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடிப்பதும் அதை ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்டஅமைப்புகள் வேடிக்கைப் பார்ப்பதும் இந்திய வரலாற்றின் விநோதமான காட்சிகள். எங்கு பார்த்தாலும், லஞ்சம் ஊழலும் முறைகேடுகளும் கொடிகட்டி கோலோச்சுகின்றன. இந்த அநியாய அவலங்களுக்கு மைனாரிட்ட அ.தி.மு.க அரசுதான் முதல் பொறுப்பு. அதை பார்த்துக்கொண்டிருக்கும் ஆளுநர் இரண்டாவது பொறுப்பு.

தமிழ்நாட்டில் முதல்வர் பழனிசாமி தலைமையில் மைனாரிட்டி அரசு நடந்துகொண்டிருக்கிறது. மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஆனால் அதைப்பற்றி ஆளுநர் கவலைப்படாமல், அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்க கூடிய ஆளுநர் உரையை படிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என ஸ்டாலின் தெரிவித்தார்.

click me!