ஊரே நடுங்கும் போது நாங்க மட்டும் வரணுமா..?? கொரோனா பீதியில் சட்டமன்றத்துக்கு ஆப்சென்ட் போட்ட திமுக

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2020, 10:27 AM IST
Highlights

“தனிமைப்படுத்திக்” கொள்ளாத “இத்தாலி” நாட்டின் பாதிப்பையும், “நோய் குறித்து” முன்கூட்டியே நோய் அறிகுறி குறித்த தகவல் கிடைத்தும் தயாராகாமல் அலட்சியம் செய்த சீனாவின் பாதிப்பையும் நமது மாநில அரசு உணரத் தவறியிருப்பது வருத்தமளிக்கிறது. 

கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளால் அதன் முழு விவரம் :-   கொரோனா வைரஸ் நோய் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு இருப்பதாக முதன் முதலில் 9.3.2020 அன்று கண்டுபிடிக்கப்பட்டு- இன்றுடன் 9 பேருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 12 நாளில் 9 பேருக்கு கொரோனா நோய் என்பதும்,  8950 பேருக்கு மேல் தனிமைப்படுத்துப்பட்டு- கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தியும்  “நோயை எதிர்கொள்ள” நமக்கு கிடைக்கும் “Golden Hours” களை வீணடிக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

மத்திய அரசு பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் பி மற்றும் சி ஊழியர்கள் 50 சதவீதம் பணிக்கு வந்தால் போதும் என்றும்- இந்த நடைமுறை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு- நேற்றைய தினம் தமிழ்நாட்டிலும் அது நீட்டிக்கப்பட்டு இன்று அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு அமலில் இருந்துள்ளது. நேற்றைய தினம் மாநில தலைமைச் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை செயலாளர்  “கொரோனா நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் ரிப்போர்ட் ஆன 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, “அந்த மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகளை மட்டும் அனுமதிக்குமாறு” மாநில அரசுக்கு  அறிவுறுத்தியுள்ளார். 

 “தனிமைப்படுத்துவது” மட்டுமே கொரோனா நோய் தடுப்பிற்கு இன்றியமையாத ஒரே மருந்து என்று உலகம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில்- தற்போது நாமே சட்டமன்றத்தில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பது  மக்களின் பாதுகாப்பிற்கு உகந்ததாகத் தெரியவில்லை. நோய் வரும் முன்பே “தனிமைப்படுத்திக்” கொள்ளாத “இத்தாலி” நாட்டின் பாதிப்பையும், “நோய் குறித்து” முன்கூட்டியே நோய் அறிகுறி குறித்த தகவல் கிடைத்தும் தயாராகாமல் அலட்சியம் செய்த சீனாவின் பாதிப்பையும் நமது மாநில அரசு உணரத் தவறியிருப்பது வருத்தமளிக்கிறது. 

 பிரதான எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் “தனிமைப்படுத்திக் கொள்வோம்” என்று அரசு அறிவித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே கூட்டத் தொடர் நடைபெறுகிறது.  ஆகவே மக்களின் பாதுகாப்பு கருதியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சத்தில் வாழும் மக்களின் பக்கத்தில் தொகுதியில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும்,  தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை இன்று (23.3.2020) முதல் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். “முன்எச்சரிக்கை நடவடிக்கை” மற்றும் “வரும் முன் காப்போம் நடவடிக்கை” ஆகியவற்றில் அரசின் கவனத்தை மேலும் ஈர்க்க தி.மு.க.வின் இந்த சட்டமன்ற “கூட்டத் தொடர் புறக்கணிப்பு” உதவிடும் என்று நம்புகிறேன்.

 

click me!