
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கால அவகாசம் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. வாக்கு சேகரிப்பு, பரப்புரை, பொதுக்கூட்டம் என பரபரப்பாக காணப்படுகிறது. முதல்வர் குறித்த ஆ.ராசாவின் கருத்தால் திமுக மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன், பல்லடம் தொகுதியில் போட்டியிடும் முத்து ரத்தினம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய ஸ்டாலின் பேசியதாவது, முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார். நேற்றைக்கு ஒரு கூட்டத்தில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு என்னையே பலியிடத் தயார் என்று பழனிசாமி பேசியிருக்கிறார். சபாஷ்…அவரை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒத்துக்கொள்கின்ற ஒரே பெரிய மனுஷன் பழனிசாமி தான். அது பாராட்டுக்குரியது தான்.
மிஸ்டர் பழனிச்சாமி அவர்களே… தி.மு.க.வை அழிக்கப் போகிறோம் என்று சொல்கிறீர்களே… தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்தான் அழிந்து போயிருக்கிறானே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு இல்லை. தி.மு.க.வை வீழ்த்தவும் முடியாது. அதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு இதுவரை ஒருவன் பிறக்கவுமில்லை. இனியும் ஒருவன் பிறக்கவே முடியாது.
தி.மு.க. என்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, சென்னை முதல் குமரி வரை இருக்கும் லட்சோப லட்ச ஸ்டாலின்களைக் கொண்ட இயக்கம்தான் இந்த தி.மு.க. என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. கலைஞருக்கு நான் மட்டும் மகன் அல்ல, இந்த இயக்கத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புகளும் கலைஞருடைய பிள்ளைகள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.மிஸ்டர் பழனிசாமி அவர்களே… மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி அவர்களே… தி.மு.க.வை வீழ்த்த உங்கள் உயிரைத்தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீண்ட காலம் வாழுங்கள். விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்று தி.மு.க. ஆளுகின்ற காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் இந்த காங்கேயம் கூட்டத்தின் மூலமாக மிஸ்டர் பழனிசாமி அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என பேசியுள்ளார்.