மாணவர்களின் இழப்புக்கு திராவிட முன்னேற்றக் கழகமே பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்.
நீட் தேர்வுக்கு உரிய பயிற்சி அளிக்காமலும் தேர்வு நடைபெறாது எனக் கூறி படிக்க வேண்டாம் என்று மாணவர்களை திசை திருப்பிய தி.மு.க தான் கனிமொழி, தனுஷ் ஆகிய மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வு பயத்தால் 15 மாணவ செல்வங்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. தயவு செய்து மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகிறேன். நீட்தேர்வை வைத்து அரசியல் செய்து மாணவர்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். இது போன்ற அரசியலை ஒரு போதும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து நீங்க படிக்காதீங்க படிக்காதீங்கனு சொல்லி மாணவர்களை ஏமாற்றினார்கள். மாணவர்களை திசை திருப்பாதீர்கள் என அப்போதே நாங்கள் கூறினோம். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் நான் பேசியதை வைத்து காமெடி செய்தார். கல்வித்துறை அமைச்சர் டெல்லியில் மனு கொடுத்து விட்டோடம். நீட் தேர்வு நடக்காது எனக்கூறி மாணவர்களை படிக்காமல் இருக்க காரணமாகிவிட்டார். அப்போதும் கூறினோம் உச்ச நீதி மன்றத்தில் உறுதியாக்கப்பட்ட சட்டத்தை யாராலும் தடை செய்ய முடியாது.
ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை பற்றிய புரிதல் கூட இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். நீட் தேர்வு வந்த பின்னர்தான் ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆக முடிந்துள்ளது. அனைவருக்கும் சமமான நீட் தேர்வை ஏதோ பூதம் போன்று உருவகப்படுத்தி, அரசியல் நோக்கத்திற்காக தவறாக சித்தரித்து தி.மு.க அரசியல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு சிறந்த மாணவர்களை தமிழகம் நீட்தேர்வில் பெற்ற நிலையில் தற்போதைய அரசு மாணவர்களுக்கு போதிய பயிற்சியை வழங்காமலும் படிக்க வேண்டாம் என கூறியும் திடீரென நீட் தேர்வை எழுதுங்கள் எனவும் மாற்றி மாற்றி பேசியதால் மன அழுத்தத்திலே இருந்த மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் இழப்புக்கு திராவிட முன்னேற்றக் கழகமே பொறுப்பேற்க வேண்டும்.
நீட் தேர்வை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். தமிழக கவர்னரை மக்களும் முதல்வருமே வரவேற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி கவர்னரை பார்த்து அஞ்சுவது ஏன்? அவர் எதையோ மறைப்பது போல் தெரிகிறது. கவர்னரை எதிர்ப்பவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’என அவர் கூறினார்.