பூனை எலியை கவ்வுவதுபோல் உள்ளது திமுக நிதிநிலை அறிக்கை... ஆர்.பி.உதயகுமார் அதிரடி விமர்சனம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 16, 2021, 12:26 PM IST
Highlights

 எனக்கு பொருளாதாரம் தெரியாது, ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும். 

நிதிநிலை அறிக்கை என்பது குட்டிப்பூனையை தாய்ப்பூனை கவ்வுவது போல் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள திமுக நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது என அதிமுக எம்.எல்.ஏ., ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில், கடந்த 13ம் தேதி முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது.  14ம் தேதி வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாத கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார், “ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை பார்த்தோம். அரசின் நிதி நிலையை சரிசெய்ய இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பொருளாதாரம் தெரியாது, ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும். டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அடிப்படையே அதிமுக அரசு கொண்டு வந்த மடிக்கணினி திட்டம் தான். 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், ஒரு அறிக்கையை தயார் செய்யும் போது, தாய் பூனை குட்டி பூனையை வாயில் கவ்வுவது போல் தாய் பாசத்தோடு இருக்க வேண்டும். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது” என விமர்சித்துள்ளார்.

click me!