வீரபாண்டி ராஜா இன்று தமது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.
வீரபாண்டி ராஜா இன்று தமது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.
மேற்கு மண்டலத்தில் திமுக-வின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவரது மறைவுக்குப் பின்னர் திமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவரது வாரிசுகள், பின்னர் திமுக-வில் முக்கிய பொறுப்புகளை பிடித்தனர். அந்தவகையில் சேலத்தில் தந்தையை போலவே அசைக்க முடியாத சக்தியாக மாறியவர் வீரபாண்டி ராஜா.
வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்த வீரபாண்டி ராஜாவுக்கு சமீபத்தில் தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் சேலம் சென்றபோது அவரது வருகையை பிரமாண்டமாக மாற்றி உற்சாகப்படுத்தினார் வீரபாண்டி ராஜா. இந்தநிலையில் அக்டோபர் 2-ஆம் தேதியான இன்று வீரபாண்டி ராஜாவின் பிறந்தநாளை கொண்டாட அவரது ஆதரவாளர்கள் தயாராகி வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.
வீரபாண்டி ராஜாவின் திடீர் மறைவு திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் திமுக மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.