பாஜக தொல்லை தாங்க முடியல.. ஸ்டாலின் மகள் வீட்டிலேயே கைவைத்ததால் அலறியடித்து கொண்டு எலெக்‌ஷன் கமிஷனிடம் புகார்!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 2, 2021, 1:32 PM IST
Highlights

தேர்தல் தோல்வி பயம் காரணமாக வருமான வரித்துறையை வைத்து மத்திய அரசு திமுகவை மிரட்டி பார்ப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மநீம பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது, திருவண்ணாமலை திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 


இன்று காலை முதல் சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தாமரை வீடு, அலுவலகம் உள்பட 4 இடங்களில் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.  குறிப்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், சபரீசனின் நண்பர்களான கார்த்திக்(அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மகன்), ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.

தேர்தல் தோல்வி பயம் காரணமாக வருமான வரித்துறையை வைத்து மத்திய அரசு திமுகவை மிரட்டி பார்ப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசு ஐ.டி.ரெய்டை பயன்படுத்துவதாக திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 3 ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையை சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுக, பாஜகவைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் இது போன்ற வருமான வரித்துறையினர் சோதனை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும், திமுகவை அச்சுறுத்த வருமான வரித்துறையை பாஜக பயன்படுத்துவதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!