திமுக கூட்டணியில் 4 எம்.பி.க்கள் பதவி பறிப்பா..? 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள் என சட்ட நிபுணர் விளக்கம்!

By Asianet TamilFirst Published Sep 18, 2019, 9:39 AM IST
Highlights

அரசியலில் தர்மம், மானம், நேர்மை என்ற வாதம் எல்லாம் கிடையாது. தமிழகத்திலும் இந்தியாவிலும் இதுபோல பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் 5 நிமிடங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆன வரலாறெல்லாம் இங்கே உண்டு. 

ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது மோசடி என்ற வாதத்தின் கீழ் பதவியைப் பறிக்க முடியாது என்று வழக்கறிஞர் தமிழ் மணி தெரிவித்துள்ளார். 
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  நிரந்தர சின்னம் இல்லாத திமுக கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றன. இதன்படி விழுப்புரம் தொகுதியில் விசிகவின் ரவிக்குமார்,  நாமக்கல் தொகுதியில் கொமதேகவின் சின்னராஜ், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே-வின் பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களாகச் செயல்பட்டுவருகிறார்கள்.
இந்நிலையில் இந்த 4 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு  “ஒரு கட்சியில் உறுப்பினராக இல்லாதவர், அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது மோசடி ஆகாதா? தேர்தலில் வெற்றி, தோல்வியைவிட நேர்மையாகப் போட்டியிடுவதுதான் முக்கியம்” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், “ஒரு கட்சியைச் சேர்ந்தவர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருக்கிறது. என்றாலும் தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டால், அதை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தொடர முடியும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில் திமுக சார்பில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற நால்வர் பதவியையும் பறிக்க முடியுமா என்ற கேள்வி சட்ட நிபுணரான வழக்கறிஞர் தமிழ்மணியிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்டது. “ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுவது மோசடிதானே என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது சரிதான். ஆனால், ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ஒரு நாளைக்கு முன்பு இன்னொரு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவது தவறு என்று எந்தச் சட்டத்திலும் குறிப்பிடவில்லை.
மேலும் அரசியலில் தர்மம், மானம், நேர்மை என்ற வாதம் எல்லாம் கிடையாது. தமிழகத்திலும் இந்தியாவிலும் இதுபோல பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் 5 நிமிடங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆன வரலாறெல்லாம் இங்கே உண்டு. இந்த விவகாரத்தில் இதற்கு முன்பு முன் உதாரண வழக்கு என எதுவும் இல்லை. இதுதான் முதல் வழக்கு. எனவே வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் வரை செல்லும். அதற்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். எனவே இந்த நால்வரும் பதவியில் நீடிப்பார்கள்.” என்று தெரிவித்தார். 

click me!