தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடும் பிரேமலதா விஜயகாந்த், இன்று தேர்தலுக்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிமுக, திமுக கூட்டணிகள் வேட்பாளர் பட்டியல்கள், தேர்தல் அறிக்கை ஆகியன வெளியாகிவிட்டது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக அதிமுக 18 தொகுதிகளை கூட ஒதுக்க முன் வராததால் கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக வேட்பாளர்கள் பட்டியலையும் தேமுதிக வெளியிட்டது. அதன்படி விருத்தாசலத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்க போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடும் பிரேமலதா விஜயகாந்த், இன்று தேர்தலுக்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், 234 தொகுதிகளிலும் தேமுதிக பலமாக உள்ளது. கிராமங்கள் வரை கிளைகள் கட்டமைக்கப்பட்டு பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது எனக்கூறினார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் உங்கள் பரப்புரையில் கூட்டம் அதிகம் கூடவில்லையே தேமுதிகவுக்கு எழுச்சி இல்லையே? என கேள்வி எழுப்பினார். கொரோனா காலகட்டம் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கிறது. மே 2ம் தேதி ரிசல்ட் வரும் போது அனைவரும் பார்ப்பீர்கள் என்றும் தெரிவித்தார்.