திவாகரன்- பாஸ்கரனின் கட்சிகளை கைப்பற்றுவாரா டி.டி.வி.தினகரன்..? அதிமுக கொடுக்கும் அசத்தல் ஐடியா..!

By Thiraviaraj RMFirst Published Oct 17, 2019, 1:15 PM IST
Highlights

அமமுகவை மாஃபியாக்கள் முன்னேற்றக் கழகம் என மாற்றிக் கொள்ளலாமே தவிர , ஒருநாளும் கழகத்தின் நிழலை ஆயிரம் தினகரன்கள் கூடினாலும் அண்டவும் முடியாது என அதிமுகவின் நமது அம்மா நாளேடு தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து ஆசைக்கு வெட்கமில்லை..,  அணுவளவும் வாய்ப்பில்லை என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், ‘’பொக்கை வாயயை வச்சிக்கிட்டு படிக்கல்லை கடிக்க ஆசைப்படுவது போல பூத் ஏஜெண்ட் போடுவதற்கே ஆள் இல்லாத கட்சியின் அதிபருக்கு ஆசையைப்பாடு..  ‘’எண்ணியது செய்திடல் வேண்டும், எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும். நினைத்ததெல்லாம் முடிக்க வேண்டும், நீதிக்கு தலைவணங்கிட வேண்டும்’’ என ஏழை எளியோருக்கு ஏற்றம் தருவதற்காகவே, பூக்களுக்கும் புன்னகையை கற்றுத்தந்த பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரால் விதையூன்றப்பட்ட இயக்கத்தை.... வெகுகாலமாக கரையானாய் அரித்து திண்ற கூட்டத்தை, நம் கருணைத்தாய் காலத்திலேயே துடைத்தெறிய படாதபாடுபட்டார். 

நடராஜன், திவாகரன், பாஸ்கரன், சுதாகரன், ராவணன் என அனைவரையும் பிடித்து சிறைகளில் அடைத்து கழகத்திற்கும், இவர்களுக்கும் கடுகளவும் தொடர்பு இல்லை என்பதை தொண்டர்களுக்கு பிரகடனும் செய்தார்.  கூடவே திருவாளட் டோக்கனாரையும் தமிழ்நாட்டுக் எல்லைக்குள்ளேயே தலைகாட்டக்கூடாது என்று பாண்டிச்சேரி பக்கமாக துரத்தி அடித்தார். சசிகலாவை போயஸ் தோட்டத்தில்  இருந்தே வெளியேற்றினார். பிறகு அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று மன்னிப்புடன் கூடிய உத்தரவாத கடிதத்தையும் பெற்றுக்கொண்டு தனக்கு உதவியாளராக மட்டுமே சேர்த்துக் கொண்டார். 

ஆனால் அம்மாவின் மரணத்தை தங்களுக்கான சந்தர்ப்பம் ஆக்கிக்கொண்டு கழகத்தை ஆக்கிரமிக்கும் வெறியோடு துரத்தப்பட்ட துஷ்ட சக்திகள் எல்லாமும் ஒன்ருகூடி துக்கத்தை வாய்ப்பாக்கி ஒரு தப்பான முடிவை எடுக்கவைக்க அன்று அவர்கள் பின்னிய சதிவலையும், ஆண்டவனாலும், உணமையான அதிமுக தொண்டர்களாலும் அடியோடு முறியடிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அம்மாவின் ஆத்ம விருப்பம் அதிமுகவில் பூரணமாக நிறைவேறியது. மக்கள் திலகமும், அம்மாவும் மடி வளர்த்த கழகத்தில் இருந்து மாஃபியாக்கள் மொத்தமும் துடைத்தெறியப்பட்டனர்.  கறை அகன்ற கம்பீர மிடுக்கோடு கழகம் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைகரத்தால் ஒன்றரைக்கோடி தொண்டனுக்கும் தூயவழி இயக்கமானது.

 

கடைக்கோடி தொண்டனும் மாநிலங்களவை உறுப்பினராக முடியும் , ஒரு சாமனிய தொண்டனும் சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்னும் வகையில் புரட்சிகர மிடுக்கும், புத்துணர்ச்சி சிறப்பும் சேர வாகைகளை குவித்த வண்ணம் அனைத்திந்திய அண்ணா திமுகவும் அதன் அரசும் 2021க்கான ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றிட தெம்போடு  கொடிபிடித்து நிற்கிறது.  இந்நிலையில் ‘’அதிமுக வேண்டுமானால் அமமுகவில் வந்து இணையட்டும்’ என்று திமிர்வாதம் பேசி வந்த திகார்கரனோ நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் இருபத்திரெண்டு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்களால் செல்லாக்காசு என்று தூக்கி எறியப்பட்டார். 

கழகம் சுத்திகரிக்கப்பட்ட கங்கையாக, இனி ஒருநாளும் கழிவுகள் நெருங்க முடியா அருவியாக, சாதனைகளால் ஐதிபோட்டு வரும் நிலையில் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவோம் என்று மேற்படி  மாஃபியாக்களின் தலைவர் ஊளையிடுவது இன்னும் தன்னை நம்பி ஒட்டிக்கொண்டிருக்கும் சொற்ப கூட்டத்தை ஏமாற்றி தக்க வைக்கிற தந்திரமே அன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுமானால் அவரது மாமா திவாகரன் நடத்துகிற கட்சி, அவரது தம்பி பாஸ்கரன் நடத்துகிற கட்சி இவ்விரண்டையும் கைப்பற்றி தனது ஆமமுக்கன் கட்சியை மாஃபியாக்கள் முன்னேற்றக் கழகம் என மாற்றிக் கொள்ளலாமே தவிர , ஒருநாளும் கழகத்தின் நிழலை ஆயிரம் தினகரன்கள் கூடினாலும் அண்டவும் முடியாது, இந்த இயக்கத்தை அவர்களால் கனவிலும் ஆளவும் முடியாது. சத்தியம் இது சத்தியம்’’ என உறுதியாக கூறுகிறது அந்தக் கட்டுரை. 

click me!