
தினகரன் முன்னால், கைகட்டி பேசும் அமைச்சர்கள், அவரை கட்சியை விட்டு நீக்குவதாக வெளியிட்ட அறிவிப்புக்கு பின்னால், சசிகலாவின் தம்பி திவாகனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 15 ம் தேதி, சசிகலாவின் உறவினர் மகாதேவன் இறந்ததை அடுத்து, அவரது உடல் அருகே துக்கத்துடன் அமர்ந்திருந்தனர், அவரது சகோதரர் தங்கமணியும், திவாகரனும்.
அப்போது அங்கே, தினகரன் வர, உடனடியாக அங்கிருந்து அவர்கள் எழுந்து சென்று விட்டனர். அதன் பிறகு அங்கு வந்த நடராஜனும், தினகரனை திரும்பி கூட பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
மகாதேவன் இறப்பு நிகழ்வுக்கு, முதல்வர் எடப்பாடி வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு பதில் அவரது மகன் மட்டுமே வந்தார்.
வந்தவர் சும்மா வரவில்லை, ஒரு முக்கிய செய்தியுடன் வந்தார். திவாகரனை தனியே அழைத்து, அந்த செய்தியை அவரிடம் சொல்லி விட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அதற்கு, சில நாட்களுக்கு முன்பாக, தம்பிதுரையை அழைத்து பேசிய வெங்கையா நாயுடு, தினகரன் கட்சியில் இருக்கு வரை, ஆட்சிக்கு சோதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே, ஆட்சியை காப்பாற்ற வேண்டுமானால், அவரை அப்புறப்படுத்துங்கள் என்று கூறியுள்ளதாக, திவாகரனிடம், எடப்பாடி மகன் சொல்லி இருக்கிறார்.
அதை தொடர்ந்து, மகாதேவன் உடல் அடக்கம் முடிந்த நாளன்றே, மன்னார்குடி உறவுகள் அனைவரும், அங்கேயே கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
அந்த முடிவின் படி, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தினகரனை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள், நாங்கள் யாரும் குறுக்கிட மாட்டோம் என்று அமைச்சர்களிடம் திவாகரன் கூறி இருக்கிறார்.
அதன் பிறகே, அமைச்சர்கள் அனைவரும் கூடி ஆலோசனை கூட்டம் நடத்தி, தினகரனை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, தமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் இருந்து வந்த உத்தரவு குறித்து தெரிந்து கொள்ளவே, எடப்பாடியை பலமுறை போனில் தொடர்பு கொண்டுள்ளார் தினகரன்.
அதற்கு, எடப்பாடி தரப்பில் இருந்து எந்த வித ரெஸ்பான்ஸும் இல்லை. வேறு வழியின்றி, ஒரு கட்டத்தில், எடப்பாடி தொடர்பு கொண்டு பேசியபோதுதான், இருவருக்கும் இடையே, நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த நெருப்பு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது என்று அதிமுகவினர் சிலர் கூறுகின்றனர்.